பெய்ஜிங்: பேரிடர், விபத்துகள் ஆகியவற்றைக் கையாளும் முறை தொடர்பான சட்டத்தை சீனா கடுமையாக்குகிறது. அதிகாரிகள் துரிதமாகச் செயல்படாவிடில் அவர்களுக்கு எதிரான தண்டனை மேலும் கடுமையாக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாது, சீனாவில் நிகழும் பேரிடர்கள், விபத்துகள் பற்றி ஊடகம் எவ்வாறு செய்தி வெளியிடுகிறது என்பது பற்றி தெரிந்துகொள்ள கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்படுகின்றன.
இதுதொடர்பான சட்டத் திருத்தங்களை ஜூன் 28ஆம் தேதியன்று சீன அரசாங்கம் அறிவித்தது.
அவசரநிலை ஏற்படுவதைத் தடுக்கவும் அப்படியே ஏற்பட்டாலும் அதன் தாக்கத்தைக் குறைக்க மேற்கொள்ளப்படும் பணிகளை மேம்படுத்தவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
சீன அரசாங்கத்தின் இந்த முடிவு ஊடகத்தை மேலும் கட்டுப்படுத்தும் என்று ஊடகத்துறை பகுப்பாய்வாளர்கள் அக்கறை தெரிவித்துள்ளனர்.
அண்மைக் காலமாக பல இயற்கைப் பேரிடர்களால் சீனா பாதிக்கப்பட்டது.
மோசமான வெள்ளம், வறட்சி, நிலநடுக்கம் ஆகியவை ஏற்பட்டபோது அவற்றைக் கையாளும் அதிகாரிகள் கடுமையான சவால்களைச் சந்தித்தனர்.
இந்நிலையில், ஊடகங்களுக்கு அரசாங்க அமைப்புகள் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஊடகங்கள் பேட்டி காணும்போதும் செய்தி வெளியிடும்போதும் பொதுமக்களிடமிருந்து கருத்து சேகரிக்கும்போதும் அரசாங்க அமைப்புகள் அவற்றுக்கு ஆதரவு வழங்கி வழிகாட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரிடர் நிர்வாகம் குறித்து வெளியிடப்படும் செய்திகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

