லண்டன்: பிரட்டன், பிரான்ஸ் ஆகிய இருநாடுகளும் இணைந்து, உலகின் ஏறத்தாழ 40 நாடுகளை ஒருங்கிணைத்து ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்களைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் திட்டம் குறித்த மாநாட்டை திங்கட்கிழமை (மே 11) நடத்துகின்றன.
அந்த மாநாட்டிற்கு பிரட்டனின் தற்காப்பு அமைச்சர் ஜான் ஹீலி, பிரான்சின் தற்காப்பு அமைச்சர் கேத்தரின் வாட்ரின் இருவரும் இணைந்து தலைமை ஏற்கின்றனர்.
நீரிணையில் நிலையான சண்டைநிறுத்தம் ஏற்படும் சூழலில் மாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அங்கு எத்தகைய ராணுவ உதவிகளை வழங்குவர் என்பது விவாதிக்கப்படும்.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
ஐரோப்பிய நாடுகளின் தலைமையில் ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்புத் திட்டம் முன்னெடுக்கப்படும். நீரிணையில் கன்னிவெடிகளை அகற்றுதல், கப்பல்களுடன் துணை செல்லுதல், ஆகாய வெளியைக் கண்காணித்தல் போன்ற பல நடவடிக்கைகளை நாடுகள் மேற்கொள்ளவேண்டும். அதன்வழியாக அங்குக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்லமுடியும்.
“அரசதந்திர அளவில் உள்ள உடன்பாட்டை நாங்கள் நடைமுறைப்படுத்தி நீரிணையில் கப்பல் போக்குவரத்துமீது நம்பிக்கையை மீட்டெடுக்கிறோம்,” என்று பிரிட்டனின் தற்காப்பு அமைச்சர் ஜான் ஹீலி தெரிவித்தார்.
“இதுபோன்ற எந்தத் திட்டமும், அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான போரின் தொடர்ச்சி எனக் கருதப்படும். அவற்றுக்கு உடனடியான ராணுவ பதிலடி கொடுக்கப்படும்,” என்று ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசம் கரிபபாடி கருத்துரைத்தார்.

