தைப்பே: சீனா எந்நேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதைக் கவனத்தில் கொண்டு, அதன் குடிமக்களைத் தயார் நிலையில் வைத்திருக்க, தைவான் அதன் ராணுவப் பயிற்சிகளை புதன்கிழமை (ஆகஸ்ட் 5) தொடங்கியது.
ஆண்டுதோறும் ஹன் குவாங் என்ற பெயரில் நடக்கும் அப்பயிற்சி, ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 14 வரை பத்து நாள்களுக்கு நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. தைவான் தீவு தாக்கப்பட்டால் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்த செயல்பாடுகளில் முழு நேர ராணுவ வீரர்களும் பகுதி நேரமாக அவசர காலங்களில் (ரிசர்விஸ்ட்) இயங்குவோரும் பயிற்சிகளில் ஒருங்கிணைந்து பங்கெடுப்பர் என்று தைவானின் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
பொதுமக்களும் அப்பயிற்சிகளில் பங்கேற்கும்விதமாக அது வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் அங்கமாக கைப்பேசிகள் செயல்படத் தேவைப்படும் இணையத்தின் வேகம் தற்காலிமாகக் குறைக்கப்படும். ஆகாய தாக்குதல் நடப்பதற்கான தயார்நிலை பயிற்சிகளும் இடம்பெறும்.
23 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட தைவான் தீவை சீனா நெடுநாள்களாக உரிமை கொண்டாடிவருகிறது. அதனைக் கைப்பற்ற ராணுவத்தையும் பயன்படுத்தத் தயங்காது என்று மிரட்டல் விடுத்துவருகிறது.
தைவானைச் சுற்றிவளைத்து அன்றாட அடிப்படையில் போர் விமானங்களையும் கப்பல்களையும் நிறுத்திவைத்து தைவானுக்குச் சீனா அழுத்தம் கொடுத்துவருகிறது. பெரிய அளவிலான ராணுவப் பயிற்சிகளையும் சீனா அடிக்கடி நடத்திவருகிறது.
சீனாவின் கரையோரக் காவல்படை தைவானின் தீவுகளைச் சுற்றி ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.


