தைவான் கடலோரக் காவல்படையினர் விரட்டிச் சென்றபோது படகு கவிழ்ந்து சீன மீனவர்கள் இருவர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தைவானின் வடகோடியிலுள்ள கின்மென் தீபகற்பத்தை ஒட்டிய கடற்பகுதியில் நிகழ்ந்தது.
அந்தச் சீன மீன்பிடிப் படகு புதன்கிழமையன்று (பிப்ரவரி 14) அத்துமீறி தனது கடற்பகுதியில் நுழைந்ததாகத் தைவான் தெரிவித்தது.
அந்த மீன்பிடிப் படகில் நான்கு மீனவர்கள் இருந்தனர் என்றும் அவர்கள் தங்கள் படகைச் சோதனையிட அனுமதிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.
இதனையடுத்து, அப்படகைக் கடலோரக் காவல்படையினர் விரட்டிச் சென்றபோது அது நீரில் கவிழ்ந்தது.
படகு கவிழ்ந்ததை அடுத்து, அதிலிருந்த மீனவர்கள் நால்வரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
ஆயினும், அவர்களில் இருவரைக் காப்பாற்ற முடியவில்லை என்றும் மற்ற இருவரின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் தைவான் கடலோரக் காவல்படை தெரிவித்தது.
இந்நிலையில், தன் மீனவர்கள் இருவர் மாண்ட சம்பவத்திற்குச் சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.