பேங்காக்: கொவிட்-19 நோய்த்தொற்றுக்குப் பிறகு தாய்லாந்தில் கஞ்சா விற்பனை சட்டவிரோதம் இல்லை என அறிவிக்கப்பட்டது.
அதனால் அந்நாட்டுக்குச் சுற்றுலா, மருத்துவத்துறை வாயிலாகக் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கஞ்சா விற்பனையால் தாய்லாந்தில் பல சிக்கல்கள் எழுந்தன. இதனால் பிப்ரவரி மாதம் நடக்கவுள்ள பொதுத் தேர்தலுக்குப் பிறகு அந்நாட்டில் கஞ்சா விற்பனை சட்டவிரோதம் என மீண்டும் அறிவிக்கப்படலாம்.
கஞ்சா விற்பனை சட்டவிரோதம் என அறிவிக்க முக்கிய காரணம் தற்போது அவற்றை இளம் பிள்ளைகள் பொழுதுபோக்கு காரணங்களுக்காகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டதுதான். குறிப்பாகப் பள்ளி செல்லும் குழந்தைகள் அதிகம் பயன்படுத்துவதாக ஆய்வு மூலம் தெரியவருகிறது.
பல்லாயிரக் கணக்கான கடைகளில் எளிதாகக் கஞ்சா சார்ந்த பொருள்கள் கிடைக்கின்றன.
கஞ்சா பயன்படுத்தி சுகாதாரச் சிக்கல்களை எதிர்நோக்கி மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

