பேங்காக்: சொங்க்ரான் எனப்படும் தாய்லாந்துப் புத்தாண்டுத் திருவிழாவை முன்னிட்டு தாய்லாந்துக் காவல்துறை முதன்முறையாகத் தனது முதலாவது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) இயந்திரக் காவல்துறை அதிகாரியை நகோன் பதோம் மாநிலத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்த ஏஐ காவல்துறை அதிகாரியின் பெயர் ‘நகோன்பதோம் பிலாட் பாய்’. அதன்பொருள் ‘நகோன் பதோம் பாதுகாப்பாக உள்ளது’ என்பதாகும்.
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக முவாங் மாவட்டம், டான்சன் சாலையிலுள்ள சொங்க்ரான் அவென்யூவில் அந்த இயந்திர மனிதன் பணியமர்த்தப்பட்டுள்ளது.
‘ஏஐ போலிஸ் சைபோர்க் 1.0’ என்றும் குறிப்பிடப்படும் அந்த இயந்திர மனிதனில் 360 டிகிரியிலும் செயல்படவல்ல திறன்மிகு ஏஐ படக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
மாநிலக் காவல்துறை வட்டாரம் 7, நகோன் பதோம் மாநிலக் காவல்துறை, நகோன் பதோம் மாநகராட்சி ஆகியவை இணைந்து இந்த ஏஐ காவல்துறை அதிகாரியை உருவாக்கியுள்ளன.
விழா நடக்கும் பகுதியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புப் படக்கருவிகள் மூலம் பெறப்படும் நேரடிக் காணொளிகளையும் ஆளில்லா வானூர்திக் கண்காணிப்புக் காணொளிகளையும் சைபோர்க் ஒருங்கிணைக்கும். பின்னர் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றை அது செயல்முறைக்கு உள்ளாக்கும்.
சைபோர்க்கின் படக்கருவிகளே காணொளிப் பகுப்பாய்வுச் செயல்திறனுடன் இயங்கவல்லவை. பொதுமக்களின் பாதுகாப்பைத் திறம்படக் கையாள ஏதுவாக அவை காவல்துறைத் தளபத்திய, கட்டுப்பாட்டு நிலையத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன.
முக அடையாளத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தேடப்பட்டுவரும் அல்லது அபாயமிக்க தனிமனிதர்களை சைபோர்க் அடையாளம் கண்டு, அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தும். முகத் தோற்றம், ஆடை, உடல்வாகு, பாலினம் ஆகியவற்றின்மூலம் தனிமனிதர்கள் தேடப்பட்டு, அடையாளம் காணப்படுவர்.
தொடர்புடைய செய்திகள்
திருவிழாவின்போது சந்தேகப் பேர்வழிகளையும் சைபோர்க் பின்தொடர்ந்து, அவர்கள் சண்டையிடுதல் அல்லது தாக்குதல் போன்ற வன்முறைச் செயல்களில் அல்லது இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துகொள்கிறார்களா என்பதைக் கண்காணிக்கும்.
அத்துடன், மரக்கழிகள், கத்திகள் போன்ற ஆயுதங்களையும் அதனால் கண்டறிய இயலும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆயினும், சொங்க்ரான் திருவிழாவின்போது ஒருவர்மீது ஒருவர் நீரைப் பீய்ச்சியடித்துக் கொண்டாடுவர் என்பதால் நீர்த் துப்பாக்கியை மட்டும் அது கண்டறியாது.

