வாஷிங்டன்: அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மூவர், சீனாவைச் சேர்ந்த பிரதிநிதிகளை லண்டனில் திங்கட்கிழமை (ஜூன் 9) சந்திக்கவுள்ளனர்.
அமெரிக்கக் கருவூல செயலாளர் ஸ்கோட் பெசண்ட், வர்த்தகச் செயலாளர் ஹவர்ட் லட்னிக், வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரியர் ஆகியோர் வாஷிங்டனைப் பிரதிநிதித்து பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர். சீனாவின் தரப்பிலிருந்து யார் பங்கேற்கிறார் என்பது தெளிவாக இல்லை.
இந்தச் சந்திப்பு குறித்து தமது சொந்த ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத்தளத்தில் பதிவிட்ட திரு டிரம்ப், இந்தச் சந்திப்பு நல்லபடியாக நிகழும் என்று கூறினார்.
சீன அதிபர் ஸி ஜின்பிங்கிடம் திரு டிரம்ப் தொலைபேசியதில் உரையாடியதை அடுத்து இந்தச் சந்திப்பு நடைபெற உள்ளது.
பெருகிவரும் வர்த்தகப் பதற்றங்களும் கனிமங்கள் பற்றிய சர்ச்சையும் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவும் இந்நேரத்தில் சந்திப்பு நடைபெறவுள்ளது.
வர்த்தப் பூசலைத் தணிக்க இரண்டு நாடுகளும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. அரிய கனிமப் பொருள்களின் ஏற்றுமதி மீது சீனா விதித்துள்ள கட்டுப்பாடுகளால் உலகப் பொருளியலும் நெருக்கடிக்கு உள்ளாகியது.
கனிமப் பொருள்கள் மற்ற இடங்களிலிருந்து எளிதில் கிடைக்கப்பெறாததால் இந்தக் கட்டுப்பாட்டின்மூலம் தனது கோரிக்கைகளுக்கு அமெரிக்கா செவிசாய்க்க வைக்க சீனா முயல்கிறது.