வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், டிக்டாக் செயலியின் எதிர்காலத்தை நிர்ணயிக்க நம்பிக்கையுடன் இருக்கிறார்.
சீன அதிபர் ஸி ஜின்பிங்குடன் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 19) தொலைபேசியில் வர்த்தக விவகாரங்கள் குறித்து உரையாடத் திட்டமிட்டுள்ளார் திரு டிரம்ப்.
ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்திடம் அவர் அந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டார்.
“இருவரும் உடன்பாட்டை எட்டும் நிலையில் இருக்கிறோம். சீனாவுடனான உறவு மிகவும் நன்றாக உள்ளது,” என்றார் அவர்.
திரு டிரம்ப் மீண்டும் அதிபரான பிறகு திரு ஸியுடன் இதற்கு முன்னர் ஒருமுறை தொலைபேசியில் உரையாடியிருக்கிறார். இருவரும் ஒருவர் மற்றவரைத் தத்தம் நாட்டுக்கு வருமாறு அழைத்ததாகத் திரு டிரம்ப் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி கூறியிருந்தார்.
சீன நிறுவனமான பைட்டான்சின் அமெரிக்கச் செயல்பாடுகளை விற்பதற்குக் கட்டாயப்படுத்த வழிவிடும் சட்டத்தைத் திரு டிரம்ப் மீண்டும் மீண்டும் தள்ளிப்போட்டு வருகிறார். சட்டத்தைக் கொண்டுவந்ததற்குத் தேசியப் பாதுகாப்பை அவர் காரணமாகச் சுட்டுகிறார்.
டிக்டாக் விவகாரத்தில் உடன்பாட்டை எட்ட முடியும் என்று நம்பிக்கை இருப்பதாகச் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
அதன்படி, அமெரிக்க முதலீட்டாளர்கள், பெருஞ்செல்வந்தர்கள், நிறுவனத்தார் ஆகியோர் டிக்டாக்கின் அமெரிக்க வர்த்தகங்களுக்கு உரிமையாளர்களாக இருப்பர் என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறினார்.