ஏமன் மீது புதிதாகத் தாக்குதல்கள் நடத்திய அமெரிக்க, பிரிட்டிஷ் படைகள்

ஏமன் மீது புதிதாகத் தாக்குதல்கள் நடத்திய அமெரிக்க, பிரிட்டிஷ் படைகள்

1 mins read
22daf755-0bc8-4a3f-aa64-21684b1f3ac5
பிரிட்டிஷ் ராயல் விமானப் படையினர் தங்களின் ராணுவ ஆகாயத்தளத்தில் போர் விமானம் ஒன்றைத் தயார்படுத்தும் காட்சி. - படம்: இபிஏ

வாஷிங்டன்: ஹூதிக்குச் சொந்தமான நிலத்தடிச் சேமிப்புக் கிடங்கைக் குறிவைத்து அமெரிக்க, பிரிட்டிஷ் படைகள் மீண்டும் ஏமனில் ஜனவரி 22ஆம் தேதியன்று புதிதாகத் தாக்குதல் நடத்தின.

செங்கடல் கப்பல் போக்குவரத்துக்கு எதிராக ஹூதிப் படையினர் பயன்படுத்தும் ஏவுகணை, கண்காணிப்புக் கட்டமைப்பையும் குறிவைத்து அமெரிக்க, பிரிட்டிஷ் படைகள் தாக்குதல் மேற்கொண்டதாக அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

காஸா மீது இஸ்‌ரேல் தாக்குதல் நடத்திவரும் நிலையில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாகத் தாங்கள் தாக்குதல்கள் மேற்கொண்டு வருவதாக ஏமனில் மக்கள்தொகை அதிகமுள்ள பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹூதிப் படையினர் கூறியுள்ளனர்.

ஆஸ்திரேலியா, பஹ்ரேன், கனடா, நெதர்லாந்து ஆகியவற்றுடன் செய்துகொண்ட கூட்டு ஒப்பந்தத்தை அடுத்து அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் படைகள் தாக்குதல்கள் எட்டு முறை நடத்தப்பட்டதாக ஆறு நாடுகள் கையெழுத்திட்ட கூட்டு அறிக்கை தெரிவித்தது.

“அனைத்துலக வர்த்தகத்துக்கும் அப்பாவி கடல்துறையினரின் வாழ்க்கைக்கும் மிரட்டல் விடுக்கும் வகையில் அமைந்துள்ள ஹூதிப் படையினரின் ஆற்றலைத் தகர்த்து, சீரழிக்கவே இந்தத் துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன,” என்று கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

அனைத்துலகக் கப்பல் போக்குவரத்துக்கு ஹூதிப் படையின் தாக்குதல்கள் தடங்கலாக இருந்துவருவதுடன் உலகளவில் பணவீக்கம் ஏற்படும் என்ற அச்சமும் தலைதூக்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்