இளையர் பலர் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு உடற்பயிற்சி செய்வதை ஓர் அத்தியாவசிய நடவடிக்கையாகக் கருதுபவர் அஸ்வின் கவிதாசன், 20.
இவர் 16 வயதிலிருந்து உடற் பயிற்சிக்கூடத்திற்குச் செல்கிறார். உடல் பருமனாக இருந்ததால் தனக்கு இருந்த தாழ்வு மனப்பான்மையைப் போக்க அஸ்வின் தனது உடற்கட்டில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுவதால் உடல்நலத்துடன் மனநலமும் மேம்படும் என்பது இவரின் நம்பிக்கை. உடல் சீராக இருந்தால் படிப்பு, வேலை போன்றவற்றிலும் அதிக கவனம் செலுத்தத் தெளிவு பிறக்கும் என்றார் அவர்.
முழுநேர தேசிய சேவையாளரான இவர், தன் மூன்று வேளை உணவிலும் காய்கறிப் பழங்களை அதிகமாகச் சேர்த்துக் கொள்வதாகவும் அரிசி போன்ற மாவுச்சத்து அதிகம் உள்ள உணவைக் குறைத்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
அதுமட்டுமன்றி இரவுணவு உண்ட பிறகு கிடைக்கும் நேரத்தை முகாமில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் கழிப்பதாகவும் அவர் கூறினார்.
ஆனால், நாளை செல்வோம் பிறகு செய்வோம் என்று உடற்பயற்சி செய்வதைத் தள்ளி போட்டுக்கொண்டே இருந்தால் அது பின்னாளில் நம்மையே பாதிக்கும் என்கிறார் அஸ்வின்.
ஆரோக்கியத்தை உறுதிசெய்யக்கூடிய பழக்கத்தை உடனே ஆரம்பிப்பது சிறந்தது என்றார் அவர்.
மேலும், உணவே மருந்து என்று நம் முன்னோர் காரணமின்றி கூறவில்லை. உடற்பயிற்சியோடு சிறந்த உணவுப்பழக்கத்தையும் பின்பற்றினால் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை தானாக அமைந்திடும் என்று கூறினார் அஸ்வின்.
அஸ்வினைப் பேட்டி கண்ட யாழினி கமலக்கண்ணன், 17, சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் மின்னணுப் பொறியியல் துறையில் முதலாம் ஆண்டு மாணவியாக உள்ளார்.