மாணவர்களுக்கு தமிழ்மொழியின்பால் ஈடுபாட்டை வளர்க்கவும் இலக்கியம், வரலாறு, பண்பாடு முதலியவற்றை கலை, வணிகம், பொறியியல் துறைகளின் கண்ணோட்டத்தில் அறிந்துகொள்ளவும் ‘பார்வை 2024’ வழிவகுத்தது.
கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து இரண்டாம் முறையாக நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றம் ஏற்பாடு செய்திருந்த ‘பார்வை’ நிகழ்ச்சி மார்ச் 30 நடைபெற்றது.
வழக்கமாக மேடை நிகழ்ச்சி படைத்து வந்த மன்றம், இம்முறை புதுமுயற்சியாக 12 உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 70 மாணவர்களுக்கு ஒருநாள் முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
தமிழ்மொழிக் கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஆதரவோடு இந்த முகாம் நடத்தப்பட்டது.
“தமிழ் இலக்கியத்தின்வழி இக்காலத்துக்கு ஏற்ப கலை, வணிகம், பொறியியலை எவ்வாறு கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்தோம். கல்லூரி மாணவர்களாக நாம் கற்றுக்கொள்ளும் தமிழ் இலக்கியத்தை உயர்நிலைப் பள்ளியிலிருந்தே மாணவர்களுக்கு அறிமுகம் செய்ய நினைத்தோம். இந்த எண்ணமே இவ்வாண்டின் ‘பார்வை’ நிகழ்ச்சிக்கு வித்திட்டது,” என்றார் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றத் துணைத் தலைவர் முஹம்மது ஹாரூன், 25.
இந்நிகழ்ச்சியின் திறப்பு விழா ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தைத் தழுவிய ஒரு நாட்டிய நாடகத்துடன் தொடங்கியது. இதன்மூலம் அக்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களை மாணவர்கள் அறிந்துகொண்டனர்.
மாதவி கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்காக ‘ஜெகதீஸ்வரி தேவி’ என்ற பாடலுக்கு நடனமாடிய 20 வயது திவ்யஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி, மாணவர்களுக்கு தமிழ் இலக்கியத்தை எளிதாகக் கொண்டு போய் சேர்க்கும் என்ற நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டது என்றார்.
நாடகத்தில் மாதவி கதாபாத்திரமாக நடித்த ஸ்ருதிகா குமார், 20, “இதுபோன்ற நிகழ்ச்சிகளின் மூலம்தான் தமிழ் இலக்கியங்களில் பொதிந்துள்ள விழுமியங்களையும் பண்பாட்டுக் கூறுகளையும் மாணவர்கள் அறிந்துகொள்ள முடியும்,” என்றார்.
திறப்பு விழாவைத் தொடர்ந்து, மாணவர்கள் குழுக்களாக வெவ்வேறு போட்டிகளில் கலந்துகொண்டனர். இப்போட்டிகளில் அவர்களது தமிழ் மொழி மற்றும் இலக்கிய அறிவு சோதிக்கப்பட்டதோடு கலை, வணிகம், பொறியியல் தொடர்பான தகவல்களும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.
ஆசிரியர் இந்நிகழ்ச்சி பற்றிய விவரங்களைப் பகிர்ந்துகொண்டவுடன் தன் பெயரை உடனே பதிவுசெய்ததாக பார்ட்லி உயர்நிலைப் பள்ளியின் 15 வயது நஃபிஷா அஃப்ரின் கூறினார்.
“காவேரி ஆற்றில் ‘கல்லணை’ அணையை எதற்காகக் கட்டினார்கள்? எப்படி அந்தக் காலத்தில் கட்டியிருப்பார்கள்? போன்ற கேள்விகளுக்கான விடைகளை வெவ்வேறு விளையாட்டுகள் மூலம் நாங்கள் கற்றுக்கொண்டோம்,” என்றார் நஃபிஷா.
தன்னுடைய முன்னாள் மாணவர்களின் அழைப்பையேற்று தன்னுடைய இந்நாள் மாணவர்களுடன் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தார் கிளிமெண்டி டவுன் உயர்நிலைப் பள்ளித் தமிழ் ஆசிரியர் உமாராணி நடராஜன்.
பழங்காலப் புழக்கத்தில் இருந்த சொற்கள், பெயர்கள், பொருள்கள் ஆகியவற்றை தற்காலச் சூழலுக்கு ஏற்பக் கற்பித்து வழங்கிய என்யுஎஸ் தமிழ் இலக்கிய மன்ற உறுப்பினர்களைப் பாராட்டினார் அவர்.
“பள்ளிக் காலத்தோடு தமிழ்மொழி கற்றல் முடிந்துவிடும் என்ற சிந்தனை இருக்கலாம். இங்கு பல்கலைக்கழக மாணவர்கள் அவர்களாகவே தமிழ்மொழிமீது பற்று கொண்டு அதை மேலும் வளர்த்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்றார் ஆசிரியர் உமாராணி.
பொதுமக்கள் கலந்துகொண்ட நிறைவு நிகழ்ச்சியில், போட்டி வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவியும் நிகழ்ச்சிக்கு வருகைதந்த பார்வையாளர்களில் ஒருவருமான 23 வயது சுபிக்ஷா ராமன், மாணவர்கள் தங்களுடைய வார இறுதி நாள்களை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்காக அர்ப்பணிப்பது பெருமையாக இருக்கிறது என்றார்.
இளையர்களின் முயற்சியால் தமிழ் மொழியின் எதிர்காலம் நம்பிக்கை தருவதாக உள்ளது என்பதில் தனக்கு ஐயமில்லை என்றும் அவர் கூறினார்.