சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் கவிஞர் மாரிமுத்துவின் கவிதைத் தொகுப்பான ‘தெளிந்த வானம் ஒரு பாலையை நிறுவுகிறது’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழா, மே 10ஆம் தேதி காலை நடைபெற்றது. சிங்கப்பூர் ‘அலர்’ பதிப்பகம் நூலை அச்சிட்டது.
நிகழ்ச்சியில் திருமதி கற்பக மீனா வரவேற்புரை வழங்கினார். நூலை அறிமுகம் செய்து உரையாற்றிய கவிஞர் அக்ஷய் கல்யாணகுமார், சங்க இலக்கியப் பாடல்களைத் திருக்குறள் மேற்கோள்களுடன் முன்வைத்தார்.
அவரைத் தொடர்ந்து கவிஞர் தீபக், கவிதைகள் குறித்த தமது திறனாய்வைப் பகிர்ந்துகொண்டார். விழாவில் குமாரி ஜானவி ஹரிநாராயணனின் பாடல்களும் செல்வன் கீர்த்தி கணேஷானந்தின் இசையும் இடம்பெற்றன.
‘இலன் இலெக்ட்ரிக்கல் சர்வீசஸ்’ நிறுவனர் ஜெயபால் இளங்கோவன் நூலை வெளியிட, முதல் பிரதியை நூலாசிரியரின் மனைவி ஹேமா பெற்றுக்கொண்டார். கவிஞர் மாரிமுத்துவின் ஏற்புரையுடன் விழா நிறைவடைந்தது.

