கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடனான கலந்துரையாடல், ஏப்ரல் 22ஆம் தேதி இரவு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்க் கழகத்தின் ஏற்பாட்டில் தேசிய நூலகத்தின் ஐந்தாம் மாடி ‘பாசிபிலிட்டி’ அறையில் நடைபெற்றது.
தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பானைகள் தமிழகத்தில் மட்டுமல்லாது ஓமான், எகிப்து, சிரியா, மலேசியா, சீனா என வர்த்தகப் பட்டுப் பாதை நாடுகளிலும் கிடைத்ததையொட்டி, பண்டைய தமிழரின் வணிகத்தைப் பற்றிப் பேசினார் திரு அமர்நாத்.
“அண்மைய கண்டுபிடிப்புகளில் ஒன்று இன்னும் வெளியுலகிற்குச் சரியாக வரவில்லை - அதாவது, இரும்பைக் கண்டுபிடித்தவர்கள் தமிழர்கள்தான்.
“செம்பு காலமாக இருந்த சிந்து சமவெளி காலத்திலேயே, கி.மு.2000ல் தமிழகத்தில் இரும்பு பயன்படுத்தப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன,” என்றார் திரு அமர்நாத்.
வெண்கலத்தை உருவாக்கியவர்களும் தமிழர்கள்தான் என்ற தரவுகள் கிடைத்துள்ளன என்றும் அவர் கூறினார். புலிமான் கோம்பையைச் சுட்டி, முதன்முதலில் நடுகல்லில் எழுதப்பட்ட எழுத்து தமிழ் எழுத்துதான் என்றும் கூறினார் திரு அமர்நாத்.
ஆப்பிரிக்காவைவிட்டு வெளியேறிய முதல் மனிதனின் மரபணு இன்றும் தமிழ்நாட்டில் விருமாண்டி என்பவரிடம் இருப்பதாகவும் பகிர்ந்தார்.
“ஏன் அகழாய்வுகளுக்கு வைகையை மட்டும் தேர்ந்தெடுத்தீர்கள்; காவிரியை அல்ல?” என்ற கேள்வியை எழுப்பினார் கவிஞர் மா.அன்பழகன்.
“வைகை நதி சங்க இலக்கியங்களால் போற்றப்பட்ட ஒரு நதி என்ற காரணத்தினால் குறுகிய நேரத்தில் ஆய்வுசெய்ய அதைத் தேர்வுசெய்தோம்,” என்றார் திரு அமர்நாத்.
“எல்எல்எம் எனும் செயற்கை நுண்ணறிவு உத்தியால் தமிழ் இலக்கியங்களிலிருந்து தகவல்களை எடுத்து, தொல்லியல் ஆய்வுகளுக்கு உதவமுடியும்,” என ஆலோசனை கூறினார் ஆய்வாளர் சவிதா.
“இதுபோன்ற பேச்சுகள் பள்ளிக்கூட மாணவர்களையும் சென்றடையவேண்டும்,” என்றார் தமிழாசிரியர் முருகேஸ்வரி.
“இந்த ஆய்வு தொடரவேண்டும்; மேலும் பல தகவல்கள் நம் வருங்காலச் சந்ததியினருக்குக் கிடைக்கவேண்டும்,” என்றார் புக்கிட் பாஞ்சாங் ‘ஐஎன்சி’ தலைவர் மூர்த்தி.
முழு நிகழ்ச்சியை www.tinyurl.com/AmarnathNLB என்ற இணைப்பில் காணலாம்.