தருமபுரி: மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த ஐந்து நாள்களாக முழு கொள்ளளவான 120 கனஅடியில் நீடிக்கிறது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது.
அணைக்குக் கடந்த சில நாள்களாக நீர்வரத்து அதிகரித்திருந்தது. தற்போது அது மீண்டும் குறையத் தொடங்கி உள்ளது.
கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) வினாடிக்கு 19,850 கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24) 10,850 கனஅடியாக இருந்தது. காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அதேபோல, கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 850 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவும் வெளியேற்றப்படும் நீரின் அளவும் சமமாக உள்ளது.
இதன் காரணமாக கடந்த ஐந்து நாள்களாக அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 கனஅடியில் நீடிக்கிறது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) வினாடிக்கு 9,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24) மாலை 16,000 கனஅடியாக அதிகரித்தது.