மும்பை: அமெரிக்க அதிபராக டோனல்ட் டிரம்ப் மீண்டும் பதவி வகிக்கும் காலத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு 8 முதல் 10 விழுக்காடு வரை குறையலாம் என ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) தெரிவித்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு முன்னில்லாத அளவு திங்கட்கிழமை (நவம்பர் 11) 84.38 என்ற அளவுக்குச் சரிந்தது.
‘அமெரிக்க அதிபர் தேர்தல் 2024: டிரம்ப் 2.0 எவ்வாறு இந்திய, உலகப் பொருளியல் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்’ எனும் தலைப்பிலான எஸ்பிஐ அறிக்கை, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சிறிது காலத்துக்குக் குறைந்து பின்னர் அதிகரிக்கும் என வலியுறுத்தியது.
ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவது குறித்து அஞ்சத் தேவையில்லை எனக் கூறிய அந்த அறிக்கை, அச்சரிவு குறைவாகவே இருக்கும் என்றும் சராசரி பரிவர்த்தனை விகிதம் ரூ.87-92க்கு இடைப்பட்டிருக்கும் என்றும் சொன்னது.
டிரம்ப்பின் முதல் பதவிக்காலத்தின்போது ரூபாய் மதிப்பு 11 விழுக்காடு குறைந்திருந்தது. அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலத்தில் ஏற்பட்ட சரிவைவிட இது குறைவு.
இந்நிலையில், ரூபாய் வலுவிழப்பால் பணவீக்கத்தில் சிறிய தாக்கம் ஏற்படும் என எஸ்பிஐ தெரிவித்தது.