உலகத் திருவிழாவாக உருவெடுத்துள்ள பொங்கல்

இந்தியப் பாரம்பரியத்தில் பரவியுள்ள தமிழ்ப் பண்பாடு: மோடி

2 mins read
9db2aaa5-5bec-427a-bc83-3e603c8cb2bd
அமைச்சர் எல்.முருகன் வீட்டில் பொங்கல் வைத்த இந்தியப் பிரதமர் மோடி, பொங்கல் உலகப் பண்டிகை என்றார். - படம்: திஸ்டேட்மென்
multi-img1 of 2

புதுடெல்லி: இந்தியப் பாரம்பரியத்தில் தமிழ்ப் பண்பாடு பரவியிருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (ஜனவரி 14) தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்த மோடி, இது தமிழ்ப் பண்பாட்டுச் செழுமையின் ஒளிரும் சின்னம் என்றார். “தமிழ்ப் பண்பாட்டில் உழவர்களே வாழ்வின் ஆதாரம் என்று போற்றப்படுகிறார்கள். தமிழர் வாழ்வில் விவசாயிகளின் மகத்துவத்தையும், வேளாண்மையைப் போற்றுவதையும் வெளிப்படுத்தும் சிறப்பான பண்டிகை பொங்கல். பொங்கல் பண்டிகையை அனைத்துலகத் திருவிழாவாகக் கொண்டாடுவது அளவில்லாத மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழ் மக்களுடன் பொங்கலைக் கொண்டாடுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி,” என்றார் அவர்.

டெல்லியில் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்ட மோடி, “வணக்கம், இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்” எனத் தமிழில் வாழ்த்துக் கூறினார்.

”சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் தமிழர்களின் விழாதான் பொங்கல். பொங்கல் திருவிழாவானது இயற்கை, குடும்பம், சமூகம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு சமநிலையை உருவாக்குவதற்கான வழியைக் காட்டுகிறது. பொங்கல் பண்டிகையானது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் லோஹ்ரி, மகர சங்கராந்தி, மாக் பிஹு என வெவ்வேறு பெயர்களில் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது,” என்றார் அவர்.

தமிழ்நாட்டில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் வழிபட்டது, பாம்பன் பாலத்தின் திறப்பு விழாவுக்காக ராமேசுவரம் சென்றது என்று கடந்தாண்டு தமிழ்ப் பண்பாடு தொடர்பான பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றது மிகவும் இனிமையான அனுபவமாக இருந்தாகக் குறிப்பிட்டார் மோடி.

இந்திய நாட்டின் பாரம்பரியத்தில் தமிழ்ப் பண்பாடு பரவியுள்ளது. மனிதகுலத்தின் பகிரப்பட்ட பாரம்பரியமாகவும் விளங்குகிறது. ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உணர்வு, பொங்கல் போன்ற பண்டிகைகளால் மேலும் வலுப்பெறுகிறது என்றார் அவர்.

உலகில் உள்ள ஏறக்குறைய அனைத்து நாகரிகங்களும் பயிர்கள் தொடர்பான ஏதேனும் ஒரு பண்டிகையைக் கொண்டாடுகின்றன.

தமிழ்ப் பண்பாட்டில், விவசாயி வாழ்க்கையின் அடித்தளமாகக் கருதப்படுகிறார். விவசாயிகள் நாட்டைக் கட்டமைப்பதில் வலிமையான பங்களிப்பாளர்களாக உள்ளனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு அர்ப்பணிப்புடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டில் நடைபெற்ற இயற்கை வேளாண் மாநாட்டில் கலந்துகொண்டேன். அங்கு தமிழக இளைஞர்கள் செய்துவரும் சிறந்த பணிகளைக் கண்டேன். அவர்கள் அதிக வருமானம் தரும் தொழில்முறைப் பணிகளை விட்டுவிட்டு, வயல்களில் பணியாற்றுகிறார்கள் என்று அவர் பாராட்டினார்.

குறிப்புச் சொற்கள்