சிறந்த ஆய்வாளரும் மூத்த தமிழறிஞருமான அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் மௌலானா அவர்களின் 11 நூல்களின் அறிமுக விழா ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 16) முற்பகல் நார்த் பிரிட்ஜ் சாலையில் அமைந்துள்ள மஸ்ஜித் சுல்தான் பன்னோக்கு மண்டபத்தில் நடைபெற உள்ளது.
ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் அலி மௌலானா தலைமையில், பொறியாளர் வா.ச நிஜாமுதீன், புதுவை மத்தியப் பல்கலைக்கழக பேராசிரியர் (ஓய்வு) முனைவர் அ.ஷேக் அலாவுதீன், காயல்பட்டினம் நலச்சங்கம் முன்னாள் தலைவர் வாவு ஷாஹுல் ஹமீத் ஷாஜஹான், இந்திய முஸ்லிம் சமூக வழிகாட்டுக் குழு தலைவர் முஹம்மது கௌஸ் ஆகியோர் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.
முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் அ.முஹம்மது இர்ஷாத் சிறப்புரை ஆற்ற, ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் சிங்கப்பூர்க் கிளைத் தலைவர் முனைவர் மு.அ. காதர், மூத்த ஊடகவியலாளர் முஹம்மது அலி, சிராங்கூன் டைம்ஸ் இதழின் ஆசிரியரும் எழுத்தாளருமான ஷாநவாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
நூல்கள் குறித்த ஆய்வுரையை கவிமாலைக் காப்பாளர் புதுமைத்தேனீ மா. அன்பழகன், ஜாமியா சிங்கப்பூர் அறநிறுவன மூத்த இயக்குநர் எச். முஹம்மது சலீம் ஆகியோர் வழங்க உள்ளனர்.