நல்ல தூக்கம் உடல் நலத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
உடலுறுப்புகளுக்குப் போதிய அளவு ஓய்வு தருவது தூக்கம். போதுமான தூக்கமில்லாதபோதும், தூக்கத்தில் தொந்தரவு இருக்கும் போதும், உடற்சோர்வு, கோபம், எரிச்சல் தொடங்கி, ரத்த அழுத்தம், இதய பாதிப்புகள் வரை ஏற்பட வாய்ப்புள்ளது.
ஏறத்தாழ 95 விழுக்காடு சிங்கப்பூரர்கள், சரியான தூக்கமின்றி இருப்பதாக அண்மைய ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
அதில் 74 விழுக்காட்டினர் ஐந்து முதல் ஏழு மணி நேரம் தூங்கினாலும், ஆழ்ந்த உறக்கமின்றி, ஒருவித சோர்வுடனே எழுவதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் அன்றாட பணிகளை மேற்கொள்ள ஆற்றலின்றி இருப்பதாகவும் தெரிகிறது.
குறிப்பாக, ‘மில்லேனியல்ஸ்’ என்று அழைக்கப்படும் 25 முதல் 40 வயதுடையவர்கள் தூக்கமின்மையால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் பொதுவாக 75 விழுக்காட்டினர் தூக்கத்தின் அவசியத்தை உணர்ந்திருப்பதாகவும், நல்ல தூக்கம் கிடைப்பதற்கு வேண்டியவற்றைச் செய்வதை தலையாய பணியாகக் கருதுவதாகவும் கூறியுள்ளனர்.
குறைந்தது 7 முதல் 10 மணி நேரம் தூங்குவதை வழக்கமாகக் கொண்டிருப்பதாகச் சொல்லும் தொழில்நுட்பத் துறை ஊழியர் நித்யஸ்ரீ ஜெயச்சந்திரன், 25, தனக்கு மன அழுத்தம் ஏற்படும் வேளைகளில் தூக்கம் பாதிப்படைவதாகச் சொன்னார்.
தூக்கத்தின் தேவையை உணர்ந்ததால், அதற்கென சில வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதாகவும் கூறிய அவர் தூக்க சுழற்சி பாதிப்படையாமல் இருக்க, பகலில் நேரம் கிடைத்தாலும் தூங்குவதைத் தவிர்ப்பதாகச் சொன்னார்.
தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னர் உணவை முடித்துக்கொள்வது, சரிவிகித உணவுமுறை, உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை மேற்கொள்வதாகவும் சொன்னார்.
தொடர்ந்து திறன்பேசியைப் பார்ப்பது எளிதாக நேரத்தைக் கடத்தி தூக்கத்தைப் பாதிக்கும் என்பதால், தூங்கும் முன்னர் அதை உபயோகிப்பதில்லை எனவும் வெளிச்சத்தை மறைக்கும் திரை, தரையில் படுக்கும் அமைப்பு என தனக்கேற்றபடி படுக்கை அறையை அமைத்துக் கொண்டதாகக் குறிப்பிட்டார் நித்யஸ்ரீ.
“சரியான தூக்கமில்லாவிட்டால் மறுநாள் மன அழுத்தம் ஏற்படும். எனவே, நாள் முழுதும் பரபரப்பாக வேலைகளைச் செய்துவிட்டு, இரவில் தூங்குவதை வழக்கமாக்கியிருக்கிறேன்” என்றார் நித்யஸ்ரீ.
சிங்கப்பூரில் ஆய்வுப் பொறியாளராகப் பணியாற்றும் லிங்கம், 33, தமக்குப் போதிய அளவு தூக்கம் இல்லை என்றார்.
ஆறு மணி நேரம் தூங்கும் இவர், கிடைக்கும் தூக்கம் ஆழ்ந்த, நல்ல தூக்கமாக இல்லை என்கிறார். நல்ல உறக்கத்துக்கான வழிமுறைகளைப் பின்பற்ற விரும்பினாலும், அதற்கு நேரமில்லை எனவும் தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களைக் கையாளும் மனநல மருத்துவர் விக்டர், “தூக்கமின்மையால் ஏற்படும் உடல் பாதிப்புகளை பலரும் அறிந்திருந்தாலும், அது எதிர்காலத்தில் என்றோ ஒரு நாள் வரப்போகும் பிரச்சினை எனக் கருதி புறக்கணிக்கின்றனர்.
பொதுவாக ஓரிரு வாரங்கள் சரியான தூக்கம் இல்லை என்றாலே உடலில் அழுத்தம் ஏற்பட்டு, நோயெதிர்ப்புச் சக்தி குறையத் தொடங்கும். தூக்கமின்மை சரும பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு மனநல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். சராசரியாக ஏழு மணி நேரம் ஆழ்ந்த உறக்கத்தை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும் என டாக்டர் விக்டர் வலியறுத்தினார்.
அதுவும் ஒரே நேரத்தில் தூங்கி எழுவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும் என்கிறார். நீண்ட நேரம் கண்விழித்து பின்னிரவு தொடங்கி ஏழு மணி நேரம் தூங்குவது முறையல்ல. உடல் கடிகாரத்தை மாற்றியமைக்காமல் இருப்பது நல்லது என்றார் அவர்.