சமூக சுயஉதவிக் குழுவான மெண்டாக்கியின் திட்டங்கள் மூலம் 2025ஆம் ஆண்டில் 1,60,000க்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர்.
இதில், மெண்டாக்கி கல்வி உதவித் திட்டத்தில் இணைந்த 10,000க்கும் மேற்பட்ட மாணவர்களும் அடங்குவர் என்று சனிக்கிழமை (மே 2) நடைபெற்ற அதன் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மெண்டாகி தலைவர் ஸாக்கி முகமது தெரிவித்தார்.
கடந்த ஆண்டு 1,500க்கும் மேற்பட்டோர் கல்வி விருதுகள், உபகாரச் சம்பளம், உதவித்தொகை, ஆதரவு, மானியம் முதிலிய உதவிகளைப் பெற்றனர்.
பாலர் பள்ளி மாணவர்களை முதல் வகுப்பிற்குத் தயார் செய்யும் கணிதத் திட்டத்தில் 2,100 குழந்தைகள் பங்கேற்றனர்.
மலாய்/முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்துக்கான ஐந்தாண்டுத் திட்டத்தை இந்த ஆண்டு ஜனவரி மாதம் மெண்டாகி வெளியிட்டது. பிள்ளைகளின் கல்வித் தேவைக்கு சிறந்த ஆதரவை வழங்க செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பப் பயன்பாடும் அதில் ஒன்று. இதன்மூலம், ‘கான்மிகோ’ (Khanmigo) போன்ற AI கருவிகள் மூலம் மாணவர்களுக்குத் தனிப்பயனாக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.
வேலை தேடுபவர்களுக்கு உதவும் வகையில் மே மாதம் முதல் ‘ரெடி அட் ஒர்க்’ எனும் புதிய முயற்சி தொடங்கப்படவுள்ளது.
இது மின்னிலக்கக் கல்வியறிவு, திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்கும்.
மேலும், வாசிப்புத் திறன், பள்ளிக்குப் பிந்தைய ஆதரவுத் திட்டங்களும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
“வேகமாக மாறிவரும் உலகில் யாரும் பின்தங்கிவிடக்கூடாது என்பதை உறுதி செய்வதே எங்களது நோக்கம்,” என்று ஸாக்கி முகமது கூறினார்.
முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஃபைஷல் இப்ராகிம், மெண்டாகியின் 2030 செயல்திட்டம் சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரையும் மேம்படுத்தும் என்று குறிப்பிட்டார்.

