ஈசூனில் எக்சிகியூட்டிவ் கூட்டுரிமைக் குடியிருப்புக்கான கட்டுமானத் தளம் ஒன்றில் எட்டு நாள்களில் எட்டு தீச்சம்பவங்கள் குறித்து புகார் செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.
அதிகாரிகளின் ஆரம்பகட்ட விசாரணையில், அவை யாவும் வேண்டுமென்றே எரியூட்டியதால் ஏற்பட்ட தீச்சம்பவங்கள் என்று தெரியவந்துள்ளது.
ஈசூன் குளோஸ் பகுதியில் தீச்சம்பவங்கள் நவம்பர் 20 முதல் நவம்பர் 27 வரை நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
‘நார்த் காயா’ கட்டுமானத் தளத்தில் சம்பவங்கள் ஏற்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிந்து வந்தது.
கட்டுமானத் தள வளாகத்தின் வெவ்வேறு பகுதிகளில் கட்டுமானப் பொருள்கள், அறைகலன்கள் போன்றவை தீவைக்கப்பட்டதாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
தீயணைப்பு அதிகாரிகள் அல்லது அவ்விடத்தில் இருந்த கட்டுமான ஊழியர்கள் தீயை அணைத்ததாகவும் கூறப்படுகிறது.
ஒரு தீச்சம்பவத்தில் புகையைச் சுவாசித்ததற்காக இருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அறியப்படுகிறது.
தீச்சம்பவங்கள் குறித்து புகார் செய்யப்பட்டதாகத் தெரிவித்த காவல்துறையினர், விசாரணை நடந்து வருவதாகக் குறிப்பிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
மொத்தம் 616 குடியிருப்புகளைக் கொண்ட ‘நார்த் காயா’ திட்டத்தில், 14 மாடிகள் கொண்ட 11 கட்டடங்கள் கட்டப்பட உள்ளதாக அதன் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

