நாட்டின் மொத்தத் தேவையில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைந்த அளவு உணவுப் பொருளே மத்திய கிழக்கிலிருந்து சிங்கப்பூருக்கு இறக்குமதியாகிறது.
இருந்தபோதும், அங்கு நிலவும் போர்ச் சூழல் காரணமாக உள்ளூர் உணவு விலைகள் உயரக்கூடும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ எச்சரித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் விநியோகம் 0.5 விழுக்காட்டும் குறைவு. ஆனால், போக்குவரத்து, தளவாடச் செலவுகள் காரணமாக விலைகளில் மாற்றம் ஏற்படக்கூடுப் என்று புதன்கிழமை (மார்ச் 18) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் அமைச்சர் குறிப்பிட்டார்.
எகிப்திலிருந்து ஆரஞ்சு, துருக்கியிலிருந்து எலுமிச்சை, சவுதி அரேபியாவிலிருந்து பேரீச்சம்பழம் போன்றவை இறக்குமதி செய்யப்படுகின்றன.
உலகளாவிய அளவில் உர உற்பத்தியில் மத்திய கிழக்கு வட்டாரம் முக்கியப் பங்கு வகிப்பதால் போரினால் ஏற்படும் போக்குவரத்துத் தடைகள், வேளாண்மையையும் கால்நடை வளர்ப்பையும் பாதிக்கும் என்று அவர் விளக்கினார்.
இது கோழி, மாட்டு இறைச்சி விலைகள் உயரக் காரணமாக அமையலாம். மேலும், எரிவாயு விலை உயர்வால் உணவகங்கள், உணவங்காடி நிலையங்களில் சமையல் செலவை அதிகரிக்கக்கூடும்.
சிங்கப்பூர் தனது உணவுத் தேவையில் 90 விழுக்காட்டுக்கும் மேலாக இறக்குமதியை நம்பியிருப்பதால், பருவநிலை மாற்றமும் ஒரு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.
நீர் பற்றாக்குறை அல்லது பயிர் விளைச்சலைப் பாதிக்கும் பருவநிலை மாற்றத்தின் பாதிப்பு, சிங்கப்பூரைப் பாதிக்கக்கூடும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
பருவநிலைமாற்றம் ஏற்படுத்தும் பரவலான தாக்கத்தைக் கருத்தில்கொண்டே அமைச்சு 2026ஆம் ஆண்டில் பருவநிலைமாற்றம் தொடர்பான விவகாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்றும் திருவாட்டி ஃபூ கூறினார்.
கடல் மட்ட உயர்வு, வெப்ப பாதிப்புகளிலிருந்து நாட்டைப் பாதுகாக்க பல்வேறு புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. உலகளாவிய அரசியல் சூழலில் அமெரிக்கா போன்ற பெரிய நாடுகள் பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகுவது போன்ற சவால்கள் இருந்தாலும், சிங்கப்பூர் தனது உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த இறக்குமதி ஆதாரங்களைப் பன்முகப்படுத்துவது, கையிருப்பு வைத்திருத்தல் போன்ற தற்காப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 2026 நிதியாண்டில் இதற்காக $3.69 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

