வேறொரு நிறுவனத்தின் எஸ் பாஸ் வேலை அனுமதிச்சீட்டு வைத்திருந்த ஒருவர், இந்தியாவைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்களுக்குச் சட்டவிரோத பணப் பரிமாற்றச் சேவைகளை வழங்க நண்பருக்கு உதவியுள்ளார்.
லிட்டில் இந்தியாவில் உள்ள கடைவீட்டில் இருந்து சட்டவிரோதத் தொழிலை நடத்திவந்த 45 வயது ராஜு கிருஷ்ணமூர்த்தி, சென்ற ஆண்டு பிப்ரவரிக்கும் ஏப்ரலுக்கும் இடையில் $28 மில்லியனுக்கும் மேல் வசூலித்துள்ளார்.
மேலும் அவர் , வாடிக்கையாளர்களுக்குத் தனது சொந்தப் பணப் பரிமாற்றச் சேவைகளையும் வழங்கத் தொடங்கினார்.
ஜூலை 15ஆம் தேதி, ராஜுவுக்கு ஒன்பது மாதங்களும் ஏழு வாரங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மற்றொருவருடன் சேர்ந்து எல்லை தாண்டிய பணப் பரிமாற்ற வணிகத்தை நடத்தச் சதி செய்ததாக ஒரு குற்றச்சாட்டும் வேலை அனுமதிச்சீட்டு விண்ணப்பத்திற்காகத் தவறான தகவலை அளிக்க ஒருவருக்குத் துணைபோனதாக மற்றொரு குற்றச்சாட்டையும் அவர் ஒப்புக்கொண்டார்.
அவருக்கு $60,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
ராஜு 2022ல் சட்டவிரோதப் பணப் பரிமாற்றச் சேவையைப் பயன்படுத்தியதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.
அவருக்கு சையத் என்ற ஆடவருடன் அறிமுகம் ஏற்பட்டது. பின்னர், லிட்டில் இந்தியாவில் உள்ள நோரிஸ் ரோட்டில் உள்ள கடைவீடொன்றில் இயங்கிவந்த சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வணிகத்தை நடத்துவதில் உதவ ராஜு விரும்புகிறாரா என்று சையத் கேட்டார்.
மாதம் $1,500க்கு அந்தச் சட்டவிரோத வேலையைச் செய்யச் சம்மதித்து, கடைவீட்டில் வசித்துவந்தார்.
சென்ற ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி காவல்துறையினர் கடைவீட்டில் அதிரடிச் சோதனை நடத்தியபோது இருவரின் சதித்திட்டங்களும் வெளிச்சத்திற்கு வந்தன. ராஜுவிடமிருந்து காவல்துறையினர் $314,000க்கும் மேல் ரொக்கத்தைக் கைப்பற்றினர்.

