சிங்கப்பூர் முழுவதும் உள்ள பல உணவுக்கூடங்கள் மற்றும் காப்பிக் கடைகளில் காணப்படும் ஒரு காட்சியைப் போலவே, முதியோர் குழு ஒன்று, நன்கு பரிச்சயமான சிவப்பு நிற ‘கோப்பித்தியாம்’ அடையாளப் பலகையின் கீழ் ஒரு மேசையைச் சுற்றி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தது.
இந்தச் சூழல், உணவு மற்றும் பானக் கடைகள் போலத் தோற்றமளிப்பவை, உண்மையில் ஒரு காப்பிக் கடையில் காணப்படும் கடைகளைப் பிரதிபலிக்கும் முழு உயர ஒட்டுவில்லைகளாகும்.
சாலையோர வியாபாரிகளுக்குப் பதிலாக, தாதியர் முன்னதாக தயாரிக்கப்பட்ட உணவுகளை முதியவர்களுக்குப் பரிமாறுவதோடு, காப்பி, தேநீர், சோயா பால் போன்ற பானங்களையும் வழங்குகிறார்கள்.
இது கூ டெக் புவாட் மருத்துவமனையின் புதிதாகத் திறக்கப்பட்ட நோயாளி ஓய்வறை ஆகும். ஈசூன் சமூக மருத்துவமனையில் அமைந்துள்ள கூ டெக் புவாட் மருத்துவமனையின் தீவிர முதியோர் சிகிச்சைப் பிரிவான வார்டு D77ல் இது அமைந்துள்ளது. நோயாளிகள் தங்கியிருக்கும் போது, அவர்களுக்குப் பரிச்சயமான ஒரு சமூக இடத்தை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஃபேர்பிரைஸ் குழுமத்தின் ஒரு பகுதியான கோப்பித்தியாம் நிறுவனத்துடன் இணைந்து இந்த நோயாளி ஓய்வறை வடிவமைக்கப்பட்டது. இதில், பாரம்பரிய நன்யாங் பீங்கான் காப்பிக் குவளைகள் மற்றும் எங்கும் காணப்படும் சிவப்பு பிளாஸ்டிக் நாற்காலிகள் போன்ற பழங்கால நினைவுகளைத் தூண்டும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
கூ டெக் புவாட் மருத்துவமனை, ஈசூன் சமூக மருத்துவமனையின் துணை தாதிமை இயக்குநரும், 2025ஆம் ஆண்டின் தாதியருக்கான அதிபர் விருதைப் பெற்றவருமான 38 வயது திருமதி இவோன் யாப், இந்த ஓய்வறையின் புனரமைப்புப் பணிகளைத் தொடங்கினார். இப்பணிகள், பிப்ரவரி 2026ல் சீனப் புத்தாண்டுக்குச் சற்று முன்பு நிறைவடைந்தன.
நோயாளிகள் தங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் நேரத்தைச் செலவிட இந்த ஓய்வறை ஒரு மாற்று இடத்தை வழங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
“அவர்கள் தங்கள் படுக்கைக்கு அருகிலேயே முடங்காமல் இருக்கவும் மற்றவர்களுடன் பழகும் சூழலை அதிகரிக்கவும் இது அவர்களின் தங்குதலை இன்னும் சுவாரசியமாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்குகிறது என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

