மூலப்பொருள்களுக்கான வரியைக்கொண்டு (VAT) இணையத்தில் பொருள்கள் வாங்கப்படும் மோசடியில் ஈடுபட்டதாக நான்கு சிங்கப்பூரர்கள்மீது புதன்கிழமை குற்றஞ்சாட்டப்பட்டது.
அந்த மோசடியில் தங்கக் கடத்தலும் இடம்பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன்படி சிங்கப்பூரில் பதிவான நிறுவனங்கள் சீனாவில் இயங்கும் இரண்டு குற்றக் கும்பல்களுடன் இணைந்து சமிக்ஞைகளை மாற்றும் இயந்திரங்களை இங்கு இறக்குமதி செய்தன. அந்தச் சாதனங்களின் உள்ளே தங்கம் மறைத்துவைக்கப்பட்டது.
நீதிமன்ற ஆவணங்களில் கடத்தப்பட்ட தங்கத்தின் அளவு விளக்கப்படவில்லை.
சமிக்ஞை இயந்திரங்கள் எதற்குப் பயன்பட்டன என்பதையும் காவல்துறை தெரிவிக்கவில்லை.
சீனாவில் இயங்கிய கும்பல், தங்கத்தை சமிக்ஞை இயந்திரங்களில் மறைத்து, சிங்கப்பூருக்கு உயர்ரக தொழில்நுட்ப இயந்திரங்கள் என்ற பெயரில் அதிக விலையில் ஏற்றுமதி செய்யும்.
உயர்ரக ஏற்றுமதி என்பதால், சீன அரசாங்கம் அப்பொருள்களுக்கு திரும்பப் பெறக்கூடிய மூலதன வரிகளை விதிக்கும்.
சிங்கப்பூரை அச்சாதனங்கள் வந்தடைந்ததும் தங்கம் பிரித்து எடுக்கப்பட்டு, இயந்திரம் மீண்டும் சீனாவுக்கு அனுப்பப்படும்.
பிரித்தெடுக்கப்பட்ட தங்கம் இங்கு விற்பனை செய்யப்படும். சீனாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட இயந்திரப் பாகங்களில் அடுத்த ஏற்றுமதிக்கான தங்கம் மறைத்து வைக்கப்படும். பிறகு அங்கிருந்து அவை மீண்டும் அடுத்த ஏற்றுமதிக்குத் தயாராகும்.
ஹாங்காங்கில் செயல்படும் குற்றக்கும்பலின் அலுவலகம், உயர்ரக பொருள்களுக்கான ஏற்றுமதிக்கு திரும்பப்பெறக்கூடிய மூலதன வரியை சீன அரசாங்கத்திடம் பெற்றுக்கொள்ளும்.
சியாவ் சூன் பெங் 63, சியாவ் சூன் லியன் 62, சூ டுங் வூ 60, டான் முய் கொய் 61, ஆகிய நால்வர்மீதும் பற்பல மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. குற்றச் செயல்களுக்கென நிறுவனங்களை நடத்தியது, மோசடிக்குத் துணை போனது, தங்கக் கடத்தல் புரிந்ததோடு கள்ளப் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டது போன்ற குற்றங்கள் அவற்றில் அடங்கும்.
இணையத்தில் பொருள்கள் வாங்குதல் போன்று வடிவமைக்கப்பட்ட இந்த மோசடியில் உண்மையான நிறுவனங்களின் வர்த்தகக் காகிதங்கள் போலவே ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன என்று காவல்துறை குறிப்பிட்டது.
காவல்துறையின் வர்த்தகக் குற்றப்பிரிவுக்கு (CAD) 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கிடைத்த ரகசியத் தகவலுக்குப் பிறகு குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

