பள்ளிவாசல்கள், மதரசாக்கள் போன்ற சமூக அமைப்புகளுக்கான திறனாளர்களின் தொடர்ச்சியினை வலுப்படுத்த சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) புதிய உபகாரச் சம்பளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
முயிஸ் உபகாரச் சம்பளம் என்று அழைக்கப்படும் அந்த உபகாரச் சம்பளம் இளநிலைப் பட்டப்படிப்புக்கு ஆதரவளித்து பெறுநர்களுக்கு $120,000 வரை நிதி வழங்கும்.
படிப்பை முடித்ததும் உபகாரச் சம்பளம் பெற்ற கல்விமான்கள் சிங்கப்பூரில் உள்ள 72 பள்ளிவாசல்களில் ஒன்றில் அல்லது ஆறு முழுநேர மதரசாக்களில் மூன்று ஆண்டுகள் பணிபுரிய வேண்டும்.
முதல் தொகுதி நான்கு மாணவர்களுக்கு புதன்கிழமை (ஜூலை 9) சன்டெக் சிங்கப்பூர் மாநாடு, கண்காட்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உபகாரச் சம்பளத்தை முயிஸ் வழங்கியது.
சிறந்த கல்வித் தேர்ச்சி, தலைமைத்துவ ஆற்றல், திறமை, சமூகத்திற்குச் சேவையாற்றுவதற்கான கடப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக முயிஸ் அறிக்கை தெரிவித்தது.
புதிய உபகாரச் சம்பளம், தற்போதுள்ள சையத் இசா செமைட் உபகாரச் சம்பளத்துடன் (எஸ்ஐஎஸ்எஸ்) இணையாக வழங்கப்படுகிறது. சையத் இசா செமைட் உபகாரச் சம்பளம் $240,000 வரை வழங்குகிறது, பட்டம் பெற்றவுடன் முயிஸ், ஷரியா நீதிமன்றம் அல்லது முஸ்லிம் திருமணப் பதிவகம் ஆகியவற்றில் ஆறு ஆண்டுகள் பணிபுரிய வேண்டும்.
2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை அறுவர் அந்த உபகாரச் சம்பளத்தைப் பெற்றுள்ளனர்.
இவ்வாண்டு ஜூலை 7ஆம் தேதி மறைந்த சிங்கப்பூரின் இரண்டாவது முஃப்தியின் பெயரால் வழங்கப்படும் இந்த உபகாரச் சம்பளம் இவ்வாண்டு மூவருக்கு வழங்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
1972 முதல் 2010 வரையில் சிங்கப்பூரின் முஃப்தியாகப் ணியாற்றிய மறைந்த ஷேக் சையத் இசாவுக்கு நிகழ்ச்சியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.