சிங்கப்பூர் முழுமைத் தற்காப்புத் தினமான பிப்ரவரி 15 அன்று மாலை 6.20 மணிக்கு தீவெங்கும் ‘முக்கியச் செய்தி’ யைக் குறிக்கும் எச்சரிக்கை ஒலி ஒலிக்கும்.
பொது எச்சரிக்கை கட்டமைப்பு வழியாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை எச்சரிக்கை ஒலியை எழுப்பும்.
‘எஸ்ஜிசெக்யூர்’ கைப்பேசிச் செயலியைக் கொண்டிருக்கும் அனைத்து திறன்பேசிகளிலும் இந்த ஒலி 20 வினாடிகளுக்கு ஒலிக்கும். அதற்கு செயலியில் அறிவிப்புகள் (notification and alert) அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். அதைத் தொடர்ந்து பொது எச்சரிக்கை கட்டமைப்பின் ஒலிப்பு குறித்து குறுஞ்செய்தி இடம்பெறும் என்று வியாழக்கிழமை (பிப்ரவரி 13) சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
எச்சரிக்கை ஒலியைக் கேட்டதும் அதுபற்றி அறிந்துகொள்ள பொதுமக்கள் எந்தவொரு உள்ளூர் வானொலி நிலையத்தையோ அல்லது மீடியாகார்ப் தொலைக்காட்சி ஒளிவழியையோ நாடவேண்டும்.
ஒரு நிமிடம் நீடிக்கும் ஒலி குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று அது தெரிவித்தது.
முழுமைத் தற்காப்பு தினத்தைக் குறிக்கும் வகையில் இந்த எச்சரிக்கை ஒலிப் பயிற்சி இடம்பெறுகிறது. பொதுமக்களுக்கு பொது எச்சரிக்கை கட்டமைப்பின் ஒலிப்புகளை அறிமுகப்படுத்தவும் அவ்வாறு ஒலிக்கும்போது மக்கள் எப்படி எதிர்வினையாற்ற வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குமான சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் முயற்சிகளில் இது இடம்பெறுகிறது.
பொது எச்சரிக்கை கட்டமைப்பின் எச்சரிக்கை ஒலி பற்றிய மேல் விவரங்களுக்கு, go.gov.sg/pws என்ற இணையத்தளத்தையும் பார்வையிடலாம்.