புவிசார் அரசியல் பதற்றங்கள் துபாயில் நடைபெறவிருக்கும் அனைத்துலக பருவநிலைப் பேச்சுவார்த்தைகளை மேலும் கடினமாக்கும் என்று நீடித்த நிலைத்தன்மை சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ கூறியுள்ளார்.
முன்னர் முனைந்து முடிவுகளை எட்ட ஒன்றுகூடிய நாடுகள் தற்போது ஒன்றுடன் ஒன்று அதிகம் பேசிக்கொள்வதில்லை. உத்திபூர்வ நலன்களால் ஏற்படும் போட்டித்தன்மை நாடுகளின் குறுக்கே வருகின்றன என்றார் அவர்.
எட்டாவது எபெக்ஸ் சிங்கப்பூர் பெருநிறுவன நீடித்த நிலைத்தன்மை விருது வழங்கும் நிகழ்ச்சியில் விருதுகளை வழங்கி அமைச்சர் கிரேஸ் ஃபூ உரையாற்றினார்.
பருவநிலை நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்காக உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள், வல்லுநர்கள் முதலியோர் நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை துபாயில் நடைபெறும் 28வது மாநாட்டில் கூடுகின்றனர்.
மத்திய கிழக்கில் மோதல், மூன்று ஆண்டு கொவிட்-19 தொற்றுநோய் தாக்கம், உக்ரேன் போர் ஆகியவை “அரசாங்க நிதிநிலையில் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளன” என்று திருவாட்டி ஃபூ கூறினார், இது பருவநிலை மாற்றத்தை சமாளிக்கத் தேவையான நடவடிக்கைக்குத் தடையாக இருக்கும் என்றார் அவர்.
மாநாட்டில் நார்வே வெளியுறவு அமைச்சர் எஸ்பென் பார்த் ஈயுடன் இணைந்து பருவநிலை மாற்ற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் பேச்சுவார்த்தைகளை நடத்திய அமைச்சர் ஃபூ, இந்த பத்தாண்டுகளில் 1.5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டிருந்த வெப்பநிலை வரம்பு 1.7 டிகிரி முதல் 1.8 டிகிரி வரை செல்ல வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டார்.
2015ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ், சிங்கப்பூர் உள்ளிட்ட 196 நாடுகள் கரிம உமிழ்வைக் கட்டுப்படுத்துவதாக உறுதியளித்தன. இதனால் புவி வெப்பமயமாதல் தொழில்துறை காலத்துக்கு முந்தைய வெப்பநிலையைவிட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பு அளவுக்குள் வைத்திருக்க முடியும்.
ஏற்கெனவே வெப்பநிலை, தொழில்துறை கால வெப்பநிலைக்கு முந்தைய வெப்பநிலையைவிட ஏறக்குறைய 1.1 டிகிரி செல்சியஸ் உயர்ந்துவிட்டது, உலகம் இப்போது நீர் கட்டமைப்புகள், உணவு உற்பத்தியில் இடையூறுகளைக் காண்கிறது. “இன்னும் சில டிகிரி உயர்வு உலகிற்கு எத்தகைய பேரழிவை ஏற்படுத்தும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்,” என்று திருவாட்டி ஃபூ கூறினார்.
சிங்கப்பூரின் முக்கிய கரிம வெளிப்பாட்டு காரணியாக இருக்கும் எரிசக்தி உற்பத்தியில் கரிம வெளியேற்றத்தைக் குறைப்பதில் சிங்கப்பூர் முக்கிய கவனம் செலுத்தும் என்றார் அவர்.