வேலையிடப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக தேசிய சுற்றுப்புற வாரியத்தின்மீதும் அதன் இரண்டு ஊழியர்கள்மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
2021ஆம் ஆண்டு துவாஸ் குப்பை எரியாலையில் நிகழ்ந்த வெடிப்பின் தொடர்பில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அச்சம்பவத்தில் இருவர் மாண்டனர், ஒருவர் காயமுற்றார்.
செவ்வாய்க்கிழமையன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. வேலையிடத்தில் தங்கள் ஊழியர்களின் பாதுகாப்பை தேசிய சுற்றுப்புற வாரியம் உறுதிசெய்யவில்லை என்று நம்பப்படுகிறது. அதனால் திரு குவோக் இயோவ் வய், திரு வீ எங் லெங் ஆகியோர் மாண்டதாகக் கூறப்படுகிறது.
தேசிய சுற்றுப்புற வாரியம் விதிமுறைகளை சரியாகப் பின்பற்றாததால் திரு லோ யின் சூன் என்ற ஊழியர் காயமடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.
சம்பவம் நிகழ்ந்தபோது வாரியத்தின் குப்பை உள்கட்டமைப்பு செயல்பாட்டுப் பிரிவின் இயக்குநராக இருந்த 50 வயது கிரிஸ்டஃபர் லீ இயூ பின், துவாஸ் குப்பை எரியாலையின் பொது மேலாளராக இருந்த 54 வயது இங் வா யோங் ஆகியோர்மீதும் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரச் சட்டத்தின்கீழ் தலா ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
துவாஸ் குப்பை எரியாலை வெடிப்புச் சம்பவம் குறித்தும் சம்பந்தப்பட்டோர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்தும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வின்போது தாம் பேசப்போவதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தமது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
வெடிப்புச் சம்பவத்தைப் பற்றிப் பேசிய திருவாட்டி ஃபூ, “இச்சம்பவம், நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சில் இருக்கும் அனைவருக்கும் மிகுந்த வருத்தமும் வேதனையும் தரும் ஒன்றாகும். எங்களின் சக ஊழியர்கள் இருவர் மாண்டதால் ஏற்பட்ட துயரத்தை நாங்கள் இன்னமும் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்,” என்று கூறினார். 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ஆம் தேதியன்று பிற்பகல் 3.15 மணியளவில் துவாஸ் அவென்யூ 20ல் உள்ள ஆலையில் அந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது.
துவாஸ் குப்பை எரியாலையில் இருக்கும் கட்டுப்பாட்டு அறையில் (கன்ட்ரோல் ரூம்) இருந்த தொழில்துறை மின்விசிறியை வேறு இடத்தில் இருந்தபடி அணைக்க முடியாமல் போனது என்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட பிறகு மனிதவள அமைச்சும் அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகமும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. கோளாற்றைச் சரிசெய்ய திரு குவோக், திரு வீ, திரு லோ மூவரும் சம்பந்தப்பட்ட செயல்பாட்டு அறைக்கு அனுப்பப்பட்டனர். வெடிப்பு நிகழ்ந்தபோது அவர்கள் மின்சாரக் கட்டுப்பாட்டு அறையில் இருந்தனர்.
59லிருந்து 65 வயதுக்கு உட்பட்ட அந்த மூவரும் சிங்கப்பூரர்கள். ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தீக் காயங்களுக்கு ஆளான மற்ற இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அந்த இருவரில் ஒருவர் மூன்று நாள்களுக்குப் பிறகு மாண்டார்.