ஈசூன் வட்டாரத்தில் செப்டம்பர் 24ஆம் தேதியன்று பெண் ஒருவரை அவரது அண்டைவீட்டார் கத்தியால் குத்திக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் புளோக் 323 ஈசூன் சென்ட்ரலின் ஆறாவது மாடியில் நிகழ்ந்தது.
30 வயது திருவாட்டி நுவென் புவோங் டிராவை 66 வயது கோ ஆ ஹுவீ கொன்றதாகக் கூறப்படுகிறது.
திருவாட்டி நுவெனின் 33 வயது கணவர் படுகாயம் அடைந்தார்.
கோவைத் தடுக்க அவர் முற்பட்டபோது காயங்கள் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
இந்த இருதரப்பினருக்கும் இடையே சில பிரச்சினைகள் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சமரசம் செய்துவைக்க ஜூன் 12ல் திருவாட்டி நுவென் விண்ணப்பம் செய்திருந்தார்.
ஆனால் அதற்கு கோ வராததால் சமரசப் பேச்சு நடைபெறவில்லை என்று சட்ட அமைச்சும் தேசிய வளர்ச்சி அமைச்சும் சனிக்கிழமையன்று (செப்டம்பர் 27) தெரிவித்தன.
தொடர்புடைய செய்திகள்
விசாரணை நடைபெறுவதால் இந்த வழக்கு தொடர்பான விவரங்களை வெளியிட இரு அமைச்சுகளும் மறுத்துவிட்டன.
சத்தம் தொடர்பான புகார்கள் குறித்து தீர்வு காண அந்த அண்டைவீட்டுக்காரர்கள் முயன்று வந்த நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக அறியப்படுகிறது.
சமூக சர்ச்சைகள் தீர்வு நடுவர் மன்றத்தின் கவனத்திற்கு அந்த அண்டைவீட்டுக்காரர்கள் இடையிலான பிரச்சினை கொண்டு செல்லப்பட்டிருந்தது என்று நீ சூன் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஜாக்சன் லாம் கூறினார்.