சென்னை: தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்குத் திமுக சார்பில் பரிசுக் கூப்பன்கள் விநியோகிக்கப்பட்டதாகத் தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது.
கோவை தெற்கு, பர்கூர், பாலக்கோடு உள்ளிட்ட தொகுதிகளில் ரூ.8,000 மதிப்புள்ள பரிசுக் கூப்பன்கள் பரவலாக விநியோகிக்கப்படுவதாக அதிமுக மாநில வழக்கறிஞரணி துணைச் செயலாளரான செந்தில்வேல் குற்றஞ்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர், மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி இருவருக்கும் அவர் புகார் அனுப்பியுள்ளார்.
“தமிழகம் முழுவதும் பல்வேறு தொகுதிகளில் திமுகவினர் தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாக்காளர்களுக்கு ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன்களைச் சட்டவிரோதமாக வழங்கி வருகின்றனர்.
“குறிப்பாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி போட்டியிடும் கோவை தெற்கு, மதியழகன் போட்டியிடும் பர்கூர், செந்தில்குமார் போட்டியிடும் பாலக்கோடு உள்ளிட்ட தொகுதிகளில் வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சியான திமுக சார்பில் ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன்களை வழங்கி வருவது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி விதிமீறல்,” எனச் செந்தில்வேல் தமது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
வரிசை எண்களுடன் கூடிய இந்தப் பரிசுக் கூப்பன்களை உடனடியாகப் பறிமுதல் செய்ய வேண்டாம் என்றும் தேர்தலை நேர்மையான முறையில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

