சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 9ஆம் தேதி தொடங்கி புதன்கிழமை (செப்டம்பர் 16) பிற்பகல் மூன்று மணியோடு நிறைவடைந்தது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனைப் போட்டியாக இருந்த களம், தற்போது ஐந்து முனைப் போட்டிக்கான களமாக மாறியுள்ளது. தவெக, திமுக, அதிமுக, நாதக, இடதுசாரிகள் ஆகியவை களத்தில் உள்ளன.
முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு உட்பட ஏழு தொகுதிகள் காலியாக உள்ளன.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளைத் தவிர்த்து மற்ற தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இரு தொகுதிகளுக்கு மட்டும் இந்தியத் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்துள்ளது.
மதுராந்தகம் தொகுதியில், பரந்தாமன் (திமுக), கனிதா சம்பத் (அதிமுக), மரகதம் குமரவேல் (தவெக), சுகந்தி (சிபிஎம்), ஜானகிராமன் (நாதக) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தாராபுரம் தொகுதியில், சுகன்யா (திமுக), பானுமதி (அதிமுக), சத்தியபாமா (தவெக), லட்சுமணன் (சிபிஐ, கார்த்திகா (நாதக) ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
புதன்கிழமை (செப்டம்பர் 16) மாலை நிலவரப்படி, தாராபுரத்தில் 39 பேரும் மதுராந்தகத்தில் 48 பேரும் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வியாழக்கிழமை (செப்டம்பர் 17) நடைபெறும். வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதற்கான அவகாசம் செப்டம்பர் 19ஆம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடவும் பரப்பவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இதற்கிடையே, மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், எம்எல்ஏக்கள் இதுபோன்று குறுகிய காலத்தில் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்துவிட்டு அதே தொகுதியில் வேறு கட்சிக்காக போட்டியிடுவது மக்களை அவமானப்படுத்தும் செயல். இதைத் தடுக்க தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
