மதுரை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மதுரை உயர் நீதிமன்றக் கிளையால் தள்ளுபடி செய்யப்பட்டன.
தமிழகக் காவல்துறை விசாரணையை முடிக்கும் முன்பே இவ்வாறு கோரிக்கை விடுப்பதை ஏற்க இயலாது என்றும் நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம் என்றும் நீதிபதிகள் கோபத்துடன் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என தமிழக பாஜக, அதிமுக, தவெக ஆகிய கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இது தொடர்பாக, உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இவை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) விசாரணைக்கு வந்தபோது, அனைத்து வழக்குகளும் ஒன்றன்பின் ஒன்றாக விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், “காவல்துறை விசாரணையில் திருப்தி இல்லை என்றால் சிபிஐ விசாரணைக்கு மாற்றலாம். ஆனால், ஆரம்பக் கட்டத்திலேயே சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றால் எப்படி? நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம்,” என்று குறிப்பிட்ட நீதிபதிகள், சிபிஐ விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
பின்னர் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் தரப்பில் இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்கக் கோரிய மனுக்களை விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்டோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவும் அடுத்த இரு வாரங்களுக்குள் அரசுத் தரப்பு விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டது.