பழநி: தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான பழநி மலைக்கோயில், கடந்த ஓராண்டில் சாதனை அளவாக ரூ.100 கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டியுள்ளது.
அக்கோயில் வரலாற்றில் ஓராண்டு வருமானம் ரூ.100 கோடிக்கு அதிகமாக இருப்பது இதுவே முதல் முறை.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் அன்றாடம் அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர்.
பக்தர்களுக்குக் கோயில் நிர்வாகம் சிறப்புக் கட்டண தரிசனம், பூசைப் பொருள்கள், பஞ்சாமிர்தம், பிரசாதங்கள் விற்பனை, தங்கத் தொட்டில், தங்க ரதப் புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு கட்டணச் சேவைகளை வழங்கி வருகிறது.
இந்தக் கட்டணச் சேவை வருமானம் ரூ.100 கோடியைக் கடந்துள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 1ஆம் தேதி தொடங்கி, அடுத்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரை நிதியாண்டாகக் கொள்ளப்படுகிறது.
அதனடிப்படையில், 2025 ஜூலை முதல் 2026 ஜூன் மாதம் வரையிலான ஓராண்டில் ரூ 103 கோடியே 24 லட்சத்து 13 ஆயிரத்து 525 வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
காணிக்கை, உண்டியல் தொகை தனியாகக் கணக்கிடப்படும்.
கோயிலில் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால், நாள் முழுவதும் அன்னதானம், படிப்பாதை, யானைப் பாதை வழியாக வரும் பக்தர்களின் களைப்பை போக்க மோர் வழங்குதல் உட்பட 28 கட்டணமில்லாச் சேவைகளும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.


