புதுவை: மேகதாது அணை தொடர்பாக புதுவை சட்டமன்றத்தில் தனிநபர் தீர்மானம் கொண்டுவர அனுமதி கோரி திமுக எம்எல்ஏ கார்த்திகேயன் மனு அளித்துள்ளார்.
தற்காலிக சபாநாயகர் அன்பழகனைச் சந்தித்து கார்த்திகேயன் தனிநபர் தீர்மானம் தொடர்பான மனுவை அளித்துள்ளார்.
காவிரியின் குறுக்கே, மேகதாது பகுதியில் கர்நாடகா அரசு புதிய அணையைக் கட்டினால், காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதியான புதுவை மாநில காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளும் பொதுமக்களும் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவார்கள் எனத் தமது மனுவில் கார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, மேகதாது பகுதியில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், புதுவை சட்டமன்றத்தில் தனிநபர் தீர்மானம் கொண்டுவர உரிய அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தத் தீர்மானத்தை நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே அரசு முறைப்படி நிறைவேற்றித் தரவேண்டும் என்றும் கார்த்திகேயன் தமது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.


