சென்னை: வடகிழக்குப் பருவ மழை, டிட்வா புயலின் காரணமாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.111 கோடி நிவாரணம் வியாழக்கிழமை (ஜனவரி 15) அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தொகை பாதிக்கப்பட்ட 84,848 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
2025-2026ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவத்தில் பெய்த கனமழை, டித்வா புயலின் காரணமாக 1.39 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வேளாண், தோட்டக்கலைப்பயிர்கள் பாதிக்கப்பட்டன.
நிவாரண நிதி தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
அதைத்தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அரசாணையில், பொருளியல் இழப்பிலிருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட முதல்வர் ஸ்டாலின், நெல் உள்ளிட்ட இறவைப்பயிர்களுக்கு நிவாரணத் தொகையாக ஹெக்டருக்கு ரூ. 20,000 வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 33 விழுக்காட்டுக்கு அதிகமாகப் பாதிக்கப்பட்ட பயிர் பரப்பு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து கருத்துரு பெறப்பட்டது.

