தமிழ்நாட்டை நோக்கிப் பேரளவில் வருகையளித்த சுற்றுலாப் பயணிகளால் சுற்றுலா வளர்ச்சிக் கழக வருமானம் 2023-24ல், 5 மடங்கு அதிகரித்துள்ளதாக அம்மாநில அரசுச் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் கடந்த ஆண்டுகளைவிட 2024 ஆம் ஆண்டில் ரூ.28.69 கோடி வருவாய் ஈட்டி மாபெரும் சாதனை படைத்துள்ளதாகத் தமிழக அரசின் செய்தியறிக்கை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “புத்தாக்கம் நிறைந்தவற்றை காணும் ஆவலை சுற்றுலா அளிக்கிறது என்றும் இதனால் புத்துணர்ச்சியுடன் ஆற்றல் மற்றும் அறிவு வளர்ச்சிக்கும் அத்துறை வித்திடுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகரித்துள்ள பயணிகள் வரவால், நாட்டின் பொருளியலை வளமாக்குவதிலும், சீரானவேலை வாய்ப்புகளை நல்குவதிலும் சுற்றுலாத்துறை முக்கியக் காரணமாகத் திகழ்கிறது என்றும் அந்த அறிக்கை விவரித்தது.
சுற்றுலாத் துறை புரிந்துள்ள இச்சாதனையால், வளர்ச்சி மற்றும் வருமானம் என்பதை கடந்து, அவை இதர நாடுகளுடனான நட்புறவை பேணிக்காக்க அனைத்துலக அளவில் முக்கியப் பங்காற்றுகிறது என்றும் மாநில அரசு பாரட்டியுள்ளது.
இந்திய அளவில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை 2022ம் ஆண்டு 8.15 மில்லியன். 2023ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க, இது19.25 மில்லியன். இந்தியாவில் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை 2022ஆம் ஆண்டு 1731 மில்லியனாக இருந்தது. இது, 2023 இல் 2510 மில்லியனாக உயர்ந்துள்ளதாகவும் அறிக்கை சொன்னது.
மேலும், தமிழ்நாட்டிற்கு வருகையளித்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை, 2022ஆம் ஆண்டில் 0.14 மில்லியனாக இருந்தது. இது 2023 ஆண்டில் 1.17 மில்லியனாக உயர்ந்துள்ளதும் அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.
அதே போல, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 2022 இல் 218.58 மில்லியன் என்பது, 2023 ஆம் ஆண்டில் 286 மில்லியனாக மாறியதாகவும் புள்ளிவிவரங்கள் சுட்டின.