சென்னை: வாக்காளர்களுக்கு இலவசப் பரிசு கூப்பன்களை விநியோகித்த இரண்டு பேரை சென்னை காவல்துறை கைது செய்தது.
இவ்வாறு கூப்பன்கள் வழங்குவதில் தேர்தல் நடத்தை விதிமுறைகளைப் பின்பற்றவில்லை எனத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகள், ரூ.8,000 மதிப்பிலான பரிசு கூப்பனைப் பயன்படுத்தி சலவை இயந்திரம், தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்களை வாங்குவதற்கான திட்டத்தைத் தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ளது திமுக.
இந்த இல்லத்தரசித் திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் எனக் கருதும் திமுகவிடம் பரிசுச் சீட்டின் மாதிரியைத் தயாரித்து, அதை வீடு வீடாக வழங்கிப் பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்த காணொளிகள், புகைப்படங்கள் சமூக ஊடங்களில் பரவியதை அடுத்து, தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார் அளித்தது.
அதன் பேரில், விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம், சென்னையில் பரிசு கூப்பன்களை விநியோகித்த இருவரைக் கைது செய்தது.
இந்நிலையில், தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் உரிய அனுமதி பெற்ற பிறகே கூப்பன்கள் விநியோகிக்கப்பட்டதாக திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதைத் தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
துண்டுப் பிரசுரங்கள், கைப்பிரதிகளை அச்சிடுவதற்கு முன்பே தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் அனுமதி பெறாமல் அச்சிட்டு விநியோகிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.

