அதிமுக தலைவர்களைச் சந்திப்பேன்: உதயநிதி

அதிமுக தலைவர்களைச் சந்திப்பேன்: உதயநிதி

2 mins read
cf05e7af-6ab5-4552-b61a-9f82c843ef38
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். - படம்: இந்திய ஊடகம்

சென்னை: மருத்துவப் படிப்பிற்கான ‘நீட்’ நுழைவுத்தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவது தொடர்பில் அதிமுக தலைவர்களைச் சந்தித்துப் பேசுவேன் என்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

‘நீட்’ தேர்வுக்கு விலக்கு பெறும் நோக்கில் ‘நீட் விலக்கு நமது இலக்கு’ என்ற பெயரில் திமுக மாபெரும் கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகிறது. அதற்கு ஆதரவாக 50 நாள்களில் 50 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று, அதிபருக்கு அனுப்பி வைக்க திமுக திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வெள்ளிக்கிழமை சென்றார் திமுக இளையரணிச் செயலாளருமான உதயநிதி. அங்கு, ‘நீட்’ விலக்கிற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடம் அவர் கையெழுத்து பெற்றார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த ஆறாண்டுகளில் ‘நீட்’ தேர்வு காரணமாக 22 குழந்தைகள் இறந்துவிட்டனர். திமுகவின் தேர்தல் வாக்குறுதியாக நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொன்னோம். உண்மையாக அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

“இதுவரை 11 லட்சம் கையெழுத்துகளைப் பெற்றுள்ளோம். இதன் தொடர்பில் அனைத்து இயக்கங்களின் தலைவர்களையும் சந்தித்து, ‘நீட்’ விலக்கிற்கு ஆதரவாக கையெழுத்திட வேண்டும் எனக் கேட்டுக்கொள்வேன்,” என்று கூறினார்.

இதனையடுத்து, அதிமுக தலைவர்களையும் சந்திப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ஆம். அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து நீட் விலக்குக்கு ஆதரவாகக் கையெழுத்து பெறத் திட்டமிட்டுள்ளேன்,” என்று உதயநிதி கூறினார்.

திமுக அமைச்சர்களைக் குறிவைத்து வருமான வரித்துறைச் சோதனை இடம்பெறுவது பற்றிக் கேட்டதற்கு, “திமுகவில் இளைஞரணி, மாணவரணி உள்ளிட்ட பல்வேறு அணிகள் உள்ளன. அதேபோல் பாஜகவில் உள்ள ஓர் அணிதான் ஐடி அணி, அமலாக்கத்துறை உள்ளிட்டவை. அவர்கள் அவர்களது பணியைச் செய்துகொண்டு இருக்கிறார்கள். இதைச் சட்டப்படி சந்திப்போம். கடந்த மூன்று மாதகாலமாக அவர்களின் செயல்பாடுகள் அதிகமாக உள்ளன,” என்று அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்