ஊதியம், சுதாதாரப் பராமரிப்பு, அத்தியாவசிய தேவைகள், குடும்பத்துடன் தொடர்புகொள்வது போன்ற அம்சங்களில் அரசாங்கம் வெளிநாட்டு ஊழியர்களைக் கவனித்துக்கொள்ளும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் உறுதி அளித்துள்ளார்.
‘வெஸ்ட்லைட் பாப்பான்’ தங்கும் விடுதியைச் சேர்ந்த கிட்டத்தட்ட 80 வெளிநாட்டு ஊழியர்களை நேற்று சந்தித்துப் பேசியபோது அமைச்சர் சண்முகம் இதனைத் தெரிவித்தார்.
நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் ஜூன் 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து வெளிநாட்டு ஊழியர்களை நேரில் சந்தித்துப் பேச விரும்பியதாகவும் சில அம்சங்களில் அவர்களிடம் உறுதி அளிக்க இந்தச் சந்திப்பை நிகழ்த்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“அரசாங்கம் வெளிநாட்டு ஊழியர் தீர்வையைத் தள்ளுபடி செய்துள்ளது. அதனால் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவேண்டும். ஊதியம் தொடர்பில் பிரச்சினைகள் இருந்தால் ஊழியர்கள் எங்களிடம் தெரிவிக்கலாம்.
"அனைவருக்கும் மருத்துவ உதவி வழங்கப்படும்," என்ற அமைச்சர், ஊழியர்கள் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து அரசாங்கத்துடன் ஒத்துழைத்தால், கொரோனா கிருமித்தொற்றுப் பிரச்சினையை முறியடிக்க முடியும் என்று வலியுறுத்தினார்.
இது தொடர்பான விரிவான செய்திகளுக்கு தமிழ் முரசு நாளிதழின் நாளைய (ஏப்ரல் 23) அச்சுப் பிரதியை நாடுங்கள்!
தற்போது, $3.90 மட்டும் மாதாந்தர கட்டணமாகச் செலுத்தி தமிழ் முரசு நாளிதழின் மின்னிலக்கப் பதிப்பை உங்களது விரல் நுனிகளில் பெறலாம். மேல் விவரங்களுக்கு: https://tmsub.sg/tmadfb