பொருளியல் மந்தநிலையும் சீனர்கள் அனுசரிக்கும் பசித்திருக்கும் பேய்கள் விழாவும் புதிய வீடுகளுக்கான விற்பனையைப் பாதிக்கவில்லை.
கடந்த 11 மாதங்கள் இல்லாத அளவுக்கு புதிய வீடுகளுக்கான விற்பனை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
கடந்த நான்கு மாதங்களாக அது தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகிறது.
வீடுகளைக் கட்டி விற்கும் நிறுவனங்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 1,256 தனியார் வீடுகளை விற்பனை செய்தன.
கடந்த ஜூலை மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 1,080 தனியார் வீடுகளைவிட இது 16.3 விழுக்காடு அதிகம் என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் இன்று வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1,123 தனியார் வீடுகள் விற்கப்பட்டன. அதுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் தனியார் வீடுகளுக்கான விற்பனை 11.8 % உயர்ந்தது.
கடந்த மாதம் 18ஆம் தேதியன்று பசித்திருக்கும் பேய்கள் விழா தொடங்கியது.
அதற்கு முன்பாக பல தனியார் வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டன. கடந்த மாதத்தில் 1,582 புதிய தனியார் வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டன.
கடந்த ஜூலை மாதம் விற்பனைக்கு விடப்பட்ட 869 புதிய தனியார் வீடுகளைவிட இது 82 விழுக்காடு அதிகம். ஓராண்டுக்கு முன்பு விற்பனைக்கு விடப்பட்ட 1,015 புதிய தனியார் வீடுகளைவிட கடந்த மாதம் விற்கப்பட்ட புதிய தனியார் வீடுகளின் எண்ணிக்கை 56 % அதிகம்.
பசித்திருக்கும் பேய்கள் விழாவின்போது புதிய வீடுகளுக்கான விற்பனை பொதுவாகக் குறைவாக இருக்கும். ஆனால் இவ்வாண்டு வழக்கத்துக்கு மாறாக, கடந்த ஜூன் மாதம் 1ஆம் தேதியன்று கிருமிப் பரவலை முறியடிக்கும் திட்டம் முடிவடைந்ததும் புதிய வீடுகளுக்கான விற்பனை சூடுபிடித்தது.
எக்செகியூட்டிவ் கொண்டோமினியம் வீடுகளையும் சேர்த்து கடந்த மாதத்தில் 1,307 புதிய வீடுகள் விற்கப்பட்டன.
கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 14.4 விழுக்காடு அதிகம். ஓராண்டுக்கு முன்பு 1,168 புதிய வீடுகள் மட்டுமே விற்கப்பட்டதாக ஆணையம் வெளியிட்ட தரவுகள் தெரிவித்தன.