சீனா, ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலம் ஆகியவற்றிலிருந்து சுற்றுப் பயணிகள் மற்றும் அனைத்து வகையான பயணிகளும் அடுத்த மாதம் 6ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூருக்கு வர இயலும். சிங்கப்பூர் தன் எல்லைகளை இவ்விரு இடங்களுக்கும் நீட்டிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் இன்றி திறந்து விடுகிறது.
சிங்கப்பூருக்கு வந்ததும் அவ்விடங்களைச் சேர்ந்த பயணிகள் பிசிஆர் எனப்படும் ‘பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன்’ பரிசோதனையை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்தப் பரிசோதனையில் கொவிட்-19 தொற்று இல்லை என்பது உறுதியானால், பயணிகள் வசிப்பிடத்திலேயே தங்கியிருக்க வேண்டிய அவசியமின்றி தங்களது பணிகளை மேற்கொள்ளலாம்.
அவ்விரு பகுதிகளிலிருந்து திரும்பும் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்போர் ஆகியோருக்கும் இது பொருந்தும்.
புருணை, நியூசிலாந்து, வியட்னாம், விக்டோரியா மாநிலம் தவிர்த்த ஆஸ்திரேலியாவின் பகுதிகள் போன்றவற்றுக்கு இதுபோன்ற பயண அனுமதியை சிங்கப்பூர் ஏற்கெனவே வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அந்தப் பட்டியலில் சீனாவும் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலமும் இணைந்திருப்பதாக சிங்கப்பூர் விமானப் போக்குவரத்து ஆணையம் இன்று (அக்டோபர் 29) தெரிவித்தது. இவ்விரு நாடுகளிலும் கொரோனா தொற்றுப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொதுச் சுகாதார கண்காணிப்பு அமைப்புகளும் அங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்விரு இடங்களிலிருந்தும் வருவோர் நவம்பர் 6ஆம் தேதி முதல் விமானப் பயண அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம். பயணிகள் சிங்கப்பூருக்கு வருவதற்கு முன்பு சீனா அல்லது ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து 14 நாட்களுக்கு இருந்திருக்க வேண்டியது அவசியம்.
இன்று வரை மொத்தம் 1,375 பயணிகளின் விண்ணப்பங்கள் புருணை, நியூசிலாந்து, வியட்னாம், ஆஸ்திரேலியா (விக்டோரியா மாநிலம் தவிர) ஆகிய நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வர அனுமதித்திருப்பதாக சிங்கப்பூர் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. இங்கு வந்த பிறகு பரிசோதித்ததில் அவர்கள் யாருக்கும் கிருமித்தொற்று உறுதி செய்யப்படவில்லை.
சாங்கி விமான நிலையம் கையாளும் பயணிகளில் குறிப்பிடத்தக்க அளவினர் சீனப் பயணிகள். கடந்த ஆண்டு 7.3 மில்லியன் பயணிகள் இவ்விரு நாடுகளுக்கிடையே பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.