ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ்க்கு கடந்த 14 நாட்களுக்குள் சென்ற, சிங்கப்பூருக்கு வர குறுகிய கால நுழைவு அனுமதி வைத்திருப்பவர்கள் இம்மாதம் 24ஆம் தேதி முதல் சிங்கப்பூருக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
அதேபோல இங்கிலாந்துக்கு கடந்த 14 நாட்களுக்குள் சென்ற, சிங்கப்பூருக்கு வர நீண்டகால மற்றும் குறுகிய கால நுழைவு அனுமதி வைத்திருப்பவர்கள் சிங்கப்பூருக்குள் வரவோ அல்லது சிங்கப்பூர் வழியாக வேறு நாடுகளுக்குச் செல்லவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சுகாதார அமைச்சு இன்று (டிசம்பர்22) தெரிவித்துள்ளது.
சிங்கப்பூருக்கு வர முன்பே அனுமதி பெற்றிருப்பவர்களுக்கும் இது பொருந்தும் என்றது அமைச்சு.
நாளை நள்ளிரவு 11.59 மணி முதல் இது நடப்புக்கு வரும்.
நியூ சவுத் வேல்சில் கிருமிப் பரவல் அதிகரிப்பதாலும், இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா தொற்றால் நிலவரம் மோசமடைவதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.
இங்கிலாந்திலிருந்து சிங்கப்பூருக்குத் திரும்பும் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் இங்கு வந்ததும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன் 14 நாட்களுக்கு வசிப்பிடத்திலேயே தங்கியிருக்கும் உத்தரவையும் நிறைவேற்ற வேண்டும்.
கடந்த 14 நாட்களுக்குள் நியூ சவுத் வேல்ஸ்க்கு சென்ற சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால வருகை அனுமதி அட்டை உடையவர்கள் ஆகியோர் தங்களது வீடுகளிலேயே 7 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் அனைத்துப் பயணிகளும் சிங்கப்பூருக்காக விமானம் ஏறுவதற்கு முன்பு தங்களது பயண வரலாற்றைத் தெரிவிக்க வேண்டும்.