டான் டோக் செங் மருத்துவமனையில் பணியாற்றும் தாதி ஒருவருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த மருத்துவமனையின் மருத்துவர் ஒருவருக்கும் பொது சிகிச்சைப் பிரிவில் (general ward) மூன்று நோயாளிகளுக்கும் கிருமித்தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சிங்கப்பூரில் நேற்று (ஏப்ரல் 28) சமூக அளவில் மூவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் ஒருவர் டான் டோக் செங் மருத்துவமனையைச் சேர்ந்த தாதியாவார்.
பிலிப்பீன்ஸ் நாட்டவரான அந்த 46 வயது தாதி, பொது சிகிச்சைப் பிரிவான ‘வார்ட் 9D’யில் பணியமர்த்தப்பட்டிருந்தார்.
நேற்று முன்தினம் (ஏப்ரல் 27) அவருக்கு இருமல், தொண்டைவலி, உடல்வலி ஏற்பட்டது. டான் டோக் செங் மருத்துவமனையில் அவர் மருத்துவச் சிகிச்சை நாடியதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதே நாள், அந்தத் தாதிக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்தில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்தத் தாதி இருமுறை கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர். ஜனவரி 26ஆம் தேதி முதல் தடுப்பூசியையும் பிப்ரவரி 18ஆம் தேதி இரண்டாவது தடுப்பூசியையும் அவர் போட்டுக்கொண்டார்.
பாதிக்கப்பட்ட அந்த சிகிச்சைப் பிரிவை டான் டோக் செங் மருத்துவமனை முடக்கியுள்ளது. அந்த சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளுக்கும் பணியாளர்களுக்கும் கிருமித்தொற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டது.
மருத்துவமனையில் நிலவரத்தைக் கட்டுப்படுத்தவும் தனது நோயாளிகளையும் பணியாளர்களையும் பாதுகாக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிகிச்சைப் பிரிவுக்கு வருகையாளர்களின் எண்ணிக்கையைத் தான் கட்டுப்படுத்துவதாக டான் டோக் செங் மருத்துவமனை நேற்று (ஏப்ரல் 28) இரவு தெரிவித்துள்ளது.