கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில், நாளை மறுதினம் முதல் மருத்துவமனை படுக்கைப் பிரிவுகளுக்குள் வருகையாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த நடைமுறை, அக்டோபர் 23ஆம் தேதிவரை நான்கு வாரங்களுக்கு நீடிக்கும் என்றும் கூறப்பட்டது. சமூகத்தில் குறிப்பாக பதிவாகும் கொவிட்-19 சம்பவங்கள் அதிகரித்து வருவதால் இவ்வாறு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
அத்துடன் மருத்துவமனைப் பணியாளர்கள், நோயாளிகள், வருகையாளர்கள் ஆகியோரிடையே கிருமித்தொற்று கண்டறியப்படுவதும் அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டது.
படுக்கைப் பிரிவுகள், வருகையாளர்களுக்கு மூடப்படுவதற்கும் பணியாளர்கள் தனிமைப்படுத்தப்படுவதற்கும் இது இட்டுச் சென்றது. இதனால், மருத்துவமனைப் படுக்கைகளுக்கான தேவையும் அதிகரித்துவிட்டது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கொவிட்-19 நோயாளிகளைப் பராமரிக்க, கூடுதல் மருத்துவமனைப் படுக்கைகள் தேவைப்படுவதால், தற்போதைய நிலைமை அழுத்தத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டது.
இந்நிலையில், குறிப்பிட்ட சில நோயாளிகளைப் பார்ப்பதற்கு வருகையாளர்கள் அனுமதிக்கப்படுவர் என்றும் இது அந்தந்த மருத்துவமனையைப் பொறுத்து முடிவெடுக்கப்படும் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.