காராக்/மலேசியா: சீனாவின் பெருவாரியான மக்கள் விரும்பி உண்ணும் பழமாக டுரியான் விளங்குகிறது.
ஆரம்பத்தில் குளிரூட்டப்பட்ட டுரியான் பழங்களை மலேசியாவிலிருந்து சீனா 2019ல் இறக்குமதி செய்தது.
பிறகு 2024ஆம் ஆண்டு முதல் அப்பழங்களை அதன் முழுவடிவில் நேரடியாக வாங்கத் தொடங்கியதோடு ‘டுரியான் அரசதந்திரம்’ என்ற கொள்கையின்படி, சீனா தென்கிழக்காசிய நாடுகளின் பொருளாதாரத்துக்கு ஆதரவு நல்கியது.
அதுமுதல் தாய்லாந்து, வியட்னாம் ஆகிய நாடுகளும் சீனாவுக்கு டுரியான் பழங்களை ஏற்றுமதி செய்யத் தொடங்கின.
ஐக்கிய நாடுகளின் உணவு, விவசாய அமைப்பு அதன் தரவுகளின்படி, சீனா உலக அளவில் 2020 முதல் 2022 வரையில் உற்பத்தியான டுரியான் பழங்களில் 95 விழுக்காட்டை இறக்குமதி செய்தது என்று தெரிவித்தது.
மேலும் சீனா 2025ல் 1.87 மில்லியன் டன் அளவு டுரியான் பழங்களை இறக்குமதி செய்துள்ளதையும் ஐநா அமைப்பு குறிப்பட்டது. அதன் மதிப்பு S$9.6 பில்லியன் (US$7.5 பில்லியன்) ஆகும்.
எனவே அத்தகைய அசுர வேட்கையைத் தணிக்க மலேசிய விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால் தற்போதைய உலகப் பொருளியல் சூழல் அவர்களுக்குச் சாதகமாக இல்லை.
பருவநிலை மாற்றம் பழங்களின் தரத்தை பாதித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வெள்ளம் மரங்களை சேதப்படுத்தியது. தற்போது நிலவும் கடும் வெப்பமும் வெயிலும் மேலும் நிலைமையை மோசமாக்கியுள்ளது.
இவை அனைத்துக்கும் மேலாக மத்திய கிழக்கில் நிலவும் போர் உலக விநியோகத் தொடருக்கு தடைகளை ஏற்படுத்தி மலேசிய உற்பத்திகளை சீனாவுக்கு அனுப்பிவைக்கும் வாய்ப்புகளை கடுமையாகத் தடுத்துள்ளது.


