ஜப்பான்: பல நாடுகளின் எல்லைகளை உள்ளடக்கியத் தென்சீனக் கடலின் பகுதிகளை சீனா முழுமையாக உரிமை கோரி வருகிறது.
அதற்கு சட்டப்படி எந்த அடிப்படையும் இல்லை என ஜப்பான், பிலிப்பீன்ஸ், அமெரிக்கா உட்பட பதிநான்கு நாடுகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அனைத்துலக நிரந்தரத் தீர்ப்பாயம் 2016ல் வழங்கிய தீர்ப்பில் சீனா முன்வைத்த உரிமைக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. அனைத்துலகச் சட்டப்படி அப்போது வழங்கப்பட்ட தீர்ப்பு பிலிப்பீன்சுக்கு சாதகமாக அமைந்தது.
முக்கியத்துவம் வாய்ந்த அத்தீர்ப்பின் 10ஆம் ஆண்டு நிறைவை நினைவூட்டும் விதமாக அந்த நாடுகளின் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
அனைத்துலக தீர்ப்பாயத்தின் முடிவை சீனா ஏற்றுக்கொள்ளாமல் அதனைக் கண்டித்து தொடர்ந்து நிராகரித்து வருகிறது.
“பத்து ஆண்டுகளுக்கு முன், நடுவர் தீர்ப்பாயம் வழங்கிய முடிவு ஒரு முக்கிய மைல்கல் ஆகும். அது இறுதியானது, சட்டப்படி அனைவரையும் பிணைப்பது அதோடு சீனாவுக்கும் பிலிப்பீன்சுக்கும் இடையிலான நிலையை இறுதிப்படுத்துவது என நாங்கள் மறுவுறுதிப்படுத்துகிறோம்,” என்று அந்த கூட்டறிக்கை தெரிவித்தது.
பிலிப்பீன்சும் சீனாவும் அண்மைய ஆண்டுகளாக பலமுறை கடல் எல்லை சார்ந்த பூசல்களில் தொடர்ந்து முரண்பட்டு வந்துள்ளன.
அதன் தனிப்பட்ட பொருளியல் வட்டாரத்துக்குள் சீனா பயங்கர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பிலிப்பீன்ஸ் குற்றஞ்சாட்டியது.
தென்சீனக் கடலில் பிலிப்பீன்சின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதிகளுக்குக் கப்பல்களின் வழியாக மறுவிநியோகம் செய்யும் திட்டங்களை சீனா அடிக்கடி இடைமறித்து அதிவேகமாக தண்ணீர் பாய்ச்சும் பீரங்கிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.
சில நேரங்களில் சீனாவின் போர்கப்பல்கள் எல்லைமீறி பிலிப்பீன்ஸ் மீன்பிடி படகுகள்மீது தாக்குதல் நடத்தின.
கூட்டறிக்கையில் உள்ள நாடுகள்
ஜப்பான், பிலிப்பீன்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா, எஸ்தோனியா, இத்தாலி, லாட்வியா, லிதுவேனியா, நியூசிலாந்து ரோமேனியா, சுலோவேனியா ஆகிய நாடுகள் அந்தக் கூட்டறிக்கையில் இணைந்துள்ளன.

