பெய்ஜிங்: இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இயற்கைப் பேரிடர்களால் சீனாவுக்கு 308.29 பில்லியன் யுவான் (S$57.8 பி.) இழப்பு ஏற்பட்டதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கனமழை, நிலச்சரிவுகள், ஆலங்கட்டி மழை, புயல் காரணமாக 499 பேர் இறந்துவிட்டதாகக் கூறிய அதிகாரிகள், 89 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர். அதேவேளையில், 2.75 மில்லியனுக்கும் அதிகமானோர் இடம்பெயர நேரிட்டது.
அரிசி, சோளம், சோயா பயிர்களும் சேதமுற்றன. பொருளியலை நிலைப்படுத்த சீன அரசாங்கம் போராடிவரும் சமயத்தில் பணவீக்க அதிகரிப்பு குறித்த கவலை எழுந்துள்ளது.
இந்த ஒன்பது மாத காலகட்டத்தில் 9.71 மில்லியன் ஹெக்டர் பரப்பளவிலான பயிர்கள் பாதிக்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்தது.

