மணிலா: தென்சீனக் கடலில் தான் சொந்தம் கொண்டாடும் பகுதிகளில் அமைந்துள்ள தீவுகளை பிலிப்பீன்ஸ் மேம்படுத்தும் என்று அந்நாட்டின் ராணுவத் தலைவரான ஜெனரல் ரோமியோ பிரானர் திங்கட்கிழமையன்று (ஜனவரி 15) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பிலிப்பீன்சுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பிலிப்பீன்சின் இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்சீனக் கடலின் சில பகுதிகளை இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. வலுக்கட்டாயமாக ஆதிக்கம் செலுத்தும் நடவடிக்கைகளை இரு தரப்பும் மேற்கொள்வதாக ஒன்றை ஒன்று சாடி வந்துள்ளன.
அயுங்கின் என்று உள்நாட்டில் அழைக்கப்படும் செகண்ட் தாமஸ் ஷோலுடன் எட்டுப் பகுதிகளில் பிலிப்பீன்ஸ் ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். அவை தனது தனிப்பட்ட பொருளியல் வட்டாரத்தில் அடங்கும் என்று பிலிப்பீன்ஸ் கூறி வருகிறது.
“அந்த ஒன்பது பகுதிகளையும் மேம்படுத்த நாங்கள் விரும்புகிறோம். குறிப்பாக எங்கள் ராணுவம் இருக்கும் தீவுகளுக்கு இது பொருந்தும்,” என்று ஜெனரல் பிரானர் சொன்னார். பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினண்ட் மார்க்கோஸ் ஜூனியர் நடத்திய ராணுவ மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு ஜெனரல் பிரானர் இத்தகவல்களைத் தெரிவித்தார்.
பிலிப்பீன்ஸ் மேம்படுத்த எண்ணும் தென்சீனக் கடல் பகுதிகளில் திட்டு தீவும் அடங்கும். அதுவே தென்சீனக் கடலில் இருக்கும் ஆகப் பெரிய, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தீவாகும்.
உள்நாட்டில் பாக்-அசா என்றழைக்கப்படும் திட்டு, பிலிப்பீன்சின் பலாவான் மாநிலத்துக்கு 480 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
பிலிப்பீன்சைத் தவிர புருணை, தைவான், மலேசியா, வியட்னாம் உள்ளிட்டவையும் தென்சீனக் கடலின் பல்வேறு பகுதிகளைச் சொந்தம் கொண்டாடி வருகின்றன.