மணிலா: பிலிப்பீன்சின் கடல்துறைப் பாதுகாப்பை வலுப்படுத்துமாறு அந்நாட்டு அதிபர் ஃபர்டினாண்ட் மார்க்கோஸ் தமது அரசாங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
தனது நாட்டின் எல்லைப் பகுதிகள், அமைதி உள்ளிட்டவற்றின் தொடர்பில் இருந்தவரும் சவால்களை எதிர்கொள்ள திரு மார்க்கோஸ் இப்படி உத்தரவிட்டிருக்கிறார். சீனாவுக்கும் பிலிப்பீன்சுக்கும் இடையிலாக பூசல் மோசமடைந்துவரும் சுழலில் இந்நிலை உருவாகியுள்ளது.
கடல்துறைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான உத்தரவில் மார்ச் மாதம் 25ஆம் தேதியன்று கையெழுத்திடப்பட்டது. அத்தகவல் ஞாயிற்றுக்கிழமையன்று (மார்ச் 31) வெளியிடப்பட்டது.
அந்த உத்தரவில் சீனாவைப் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. எனினும், தென்சீனக் கடலில் சீனாவும் பிலிப்பீன்சும் சொந்தம் கொண்டாடும் பகுதியின் தொடர்பில் இருநாடுகளுக்கும் இடையே பலமுறை பிரச்சினைகள் எழுந்திருக்கின்றன. அவற்றைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட மொத்த தென்சீனக் கடல் பகுதியையும் சீனா சொந்தம் கொண்டாடிவருகிறது. அக்கடல்வழி ஆண்டுதோறும் மூன்று டிரில்லியன் டாலர் (நான்கு டிரில்லியன் வெள்ளி) மதிப்பிலான வர்த்தகப் பொருள்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
தென்சீனக் கடலில் பெய்ஜிங் சொந்தம் கொண்டாடும் பகுதிகள் பிலிப்பீன்ஸ், வியட்னாம், இந்தோனீசியா, மலேசியா, புருணை ஆகிய நாடுகளும் தங்களுக்குச் சொந்தம் என்று கூறிவருகின்றன. இதன் தொடர்பில் சீனாவின் வாதத்துக்கு சட்ட ரீதியான அடிப்படை ஏதும் இல்லை என்று 2016ஆம் ஆண்டில் நிரந்தர நடுவர் நீதிமன்றம் குறிப்பிட்டது.
ஆக அண்மையில் சென்ற வார இறுதியில் தென்சீனக் கடலில் பிலிப்பீன்சுக்கும் சினாவுக்கும் இடையே பூசல் ஏற்பட்டது. செக்கண்ட் தாமஸ் ஷோல் பகுதியில் போர்க் கப்பல் ஒன்றைப் பாதுகாத்துவரும் தனது ராணுவ வீரர்களுக்குத் தேவையான பொருள்களை வழங்கும் நடவடிக்கையில் பிலிப்பீன்ஸ் ஈடுபட்டபோது தண்ணீரைப் பீய்ச்சியடித்து சீனா அந்நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்தது.
“நமது கடற்பகுதிகளில் நிலைத்தன்மையையும் பாதுகாப்பையும் அதிகரிக்க முயற்சிகள் எடுக்கப்படும்போதும் பிலிப்பீன்ஸ் அதன் எல்லைப் பாதுகாப்பு மட்டுமின்றி தனது நாட்டு மக்களின் அமைதிக்கே பங்கம் விளைவிக்கக்கூடிய அச்சுறுத்தல்களை எதிர்நோக்குகிறது,” என்று உத்தரவில் திரு மார்க்கோஸ் குறிப்பிட்டார்.