வாஷிங்டன்: பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் சவால்களைச் சமாளிக்க மேற்கொள்ளப்படும் செயல்திட்டங்களுக்கு அமெரிக்கா $2.5 பில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது.
சூறாவளி, வெள்ளப்பெருக்கு, காட்டுத்தீ போன்ற பேரிடர்களை எதிர்கொள்ள இந்நிதி உதவும்.
அரசாங்க அவசர மேலாண்மை முகவை இந்தப் புதிய நிதியைக் கொண்டு, இரண்டு திட்டங்களை முன்னெடுக்கும். பேரிடர்கள் ஏற்படுவதற்கு முன்னரே இத்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
பேரிடர்களை தாங்கக்கூடிய உள்கட்டமைப்பின் வடிவமைப்பு, வெள்ளத்தைத் தணிக்கும் உதவித் திட்ட உருவாக்கம் ஆகிய இரண்டும் முகவையின் பணிகளாகும்.
தேசிய கடல், வளிமண்டல நிர்வாக அறிக்கையின்படி, அமெரிக்கா முழுவதும் 2023ல் மட்டும் ஏற்பட்ட மிகவும் ஆபத்தான சூறாவளிகள், வெள்ளம், காட்டுத்தீ போன்ற 24 வானிலை அல்லது இயற்கைப் பேரிடர்களால் ஒவ்வொரு முறையும் $1 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது.